திருத்தந்தை பிரான்சிஸ் : புனித பூமிக்கு இறைவனால் மட்டுமே அமைதியை அருள இயலும்
ஜூன்,09,2014. மனித முயற்சிகள் தோல்வியைக் கண்டுள்ள ஓர் இடத்தில் இறைவனால் மட்டுமே அமைதியைக்
கொண்டுவர முடியம் என்று, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அரசுத்தலைவர்களிடம் கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ். புனித பூமியில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்தில், இஸ்ரேல் அரசுத் தலைவர்
ஷிமோன் பெரெஸ், பாலஸ்தீன அரசுத்தலைவர் மஹ்முது அப்பாஸ் ஆகிய இருவருடன் இணைந்து இஞ்ஞாயிறு
மாலை வத்திக்கான் தோட்டத்தில் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமிக்கு
இறைவனால் மட்டுமே அமைதியை அருள இயலும் என்று கூறினார். சண்டையை நடத்துவதற்கு தேவைப்படும்
துணிச்சலைவிட அமைதியை ஏற்படுத்துவதற்கு அதிகத் துணிச்சல் தேவை. சண்டையைப் புறக்கணித்து
சந்திப்பு நடத்துவதற்கும், வன்முறையை விலக்கி உரையாடலுக்கும், காழ்ப்புணர்வர்களைத் தவிர்த்து
பேச்சுவார்த்தைக்கும், கோபமூட்டும் செயல்களை ஒதுக்கி உடன்பாட்டுச் செயல்களை மதிப்பதற்கும்,
நேர்மையற்ற செயல்களை விலக்கி நேர்மையான செயல்களுக்கும் “ஆம், ஆகட்டும்” என்று சொல்வதற்குத்
துணிச்சல் அவசியம் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை. நாம் செய்ய வேண்டுமென்று இறைவன்
நமக்குக் கொடுத்துள்ள பொறுப்புக்களை, நம் மனச்சாட்சிகள் மற்றும் நம் மக்கள் முன்னிலையில்
புறக்கணிக்க முடியாது. அமைதியைக் கொணர வேண்டுமென்ற ஆணையை நாம் பெற்றுள்ளோம், அதற்கு நாம்
பதிலளிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் தொடரும் வெறுப்பையும் வன்முறையையும் “சகோதரர்”
என்ற ஒரே சொல்லால் மட்டுமே தகர்க்க வேண்டுமென்ற ஆணையைப் பெற்றுள்ளோம் என்றும் இச்செப
வழிபாட்டில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்று இறைவன் நம் அனைவரையும் சகோதரர்களாக
நோக்கி, தமது வழிகளில் நம்மை வழிநடத்த விரும்புகிறார். நமது சக்தியால் மட்டும் புனித
பூமிக்கு அமைதியைக் கொண்டுவர முடியாது. இறைவனின் உதவி தேவை என்பதை நாம் அறிந்திருக்கிறோம்,
அதனை நம்புகிறோம், அதனாலே இங்கு நாம் கூடியிருக்கிறோம். இறைவன் மட்டுமே புனித பூமிக்கு
அமைதியைக் கொண்டுவர முடியும் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், அமைதிக்காகச் செபித்த
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியின் ஆண்டவரே, எங்கள் ஆயுதங்களின் பலத்தாலும்,
எங்கள் சொந்த சக்திகளாலும் சண்டைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பல தடவைகளில், பல ஆண்டுகளாக
முயற்சித்துள்ளோம். ஆயினும், எங்களின் முயற்சிகள் வீணாகின. இப்பொழுது ஆண்டவரே, எமக்கு
உதவி செய்ய வாரும். அமைதியைக் கற்றுத்தாரும், அமைதியின் பாதையில் எங்களை வழிநடத்தும்
என்றும் இறைஞ்சினார்.