நேசநாட்டுப் படைகளின் தியாகத்தை நினைவுகூர்ந்தார் திருத்தந்தை
ஜூன்,07,2014. நாத்சி கொடூரங்களிலிருந்து ஐரோப்பாவை விடுவித்த நேசநாட்டுப் படைகளின் தியாகத்தை
மக்கள் தொடர்ந்து நினைவில் வைக்க வேண்டும், அதேசமயம் இந்த நிகழ்வில் ஜெர்மானியப் படைகள்
அனுபவித்த துன்பங்களையும் மறக்கக் கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். 1944ம்
ஆண்டு ஜூன் 6ம் தேதியன்று பிரான்சின் நார்மாண்டிப் பகுதி ஆக்ரமிக்கப்பட்டதன் 70ம் ஆண்டின்
நினைவை முன்னிட்டு திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்
அவர்கள் ப்ரெஞ்ச் ஆயர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய
நாடுகள் அமைதியின் இளவரசராம் கிறிஸ்துவின் நற்செய்தியில் தங்கள் வரலாற்றின் மூலத்தைக்
கண்டுணருமாறு செபித்துள்ளார் திருத்தந்தை. 1944ம் ஆண்டு ஜூன் 6ம் தேதியன்று ஐரோப்பாவின்
விடுதலைக்காக நார்மாண்டி கடற்கரைகளில் 1,50,000த்துக்கு மேற்பட்ட நேசநாட்டுப் படைவீரர்கள்
போரிட்டனர். அதே நாளில் இவர்களில் ஏறத்தாழ 13 ஆயிரம் படைவீரர்கள் இறந்தனர்.