2014-06-05 16:52:31

திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவையில் நம்பிக்கையும், உறுதிப்பாடும் தேவைப்படுகின்றது


ஜூன்,05,2014. மத்திய கிழக்குப் பகுதியில், குறிப்பாக, சண்டைகள் மற்றும் வன்முறைகளால் துன்புறும் பகுதிகளில் வாழ்கின்ற நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு உறுதிப்பாடும், நம்பிக்கையும் மிகவும் தேவைப்படுகின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சிலிசியாவின் அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவையின் தலைவர் திருத்தந்தை முதலாம் Aram அவர்களை இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு உரைத்தார்.
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் என்ற முறையில், ஒருவர் ஒருவருடைய சுமைகளைத் தாங்கிக்கொள்ள தாழ்ச்சியுடன் கற்றுக்கொள்ள வேண்டும், நல்ல கிறிஸ்தவர்களாக, இயேசுவை நன்முறையில் பின் செல்கிறவர்களாக நாம் வாழ ஒருவர் ஒருவருக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து நம்மை அன்பு செய்து நமக்காகத் தம்மையே வழங்கியது போல நாமும் பிறரன்பில் ஒன்றிணைந்து முன்நோக்கிச் செல்வோம் எனவும் கூறிய திருத்தந்தை, திருத்தந்தை முதலாம் Aram அவர்கள் கிறிஸ்தவ ஒன்றிப்புக்காக எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருத்தந்தை முதலாம் Aram அவர்களும் அப்போஸ்தலிக்க மாளிகையிலுள்ள Redemptoris Mater சிற்றாலயத்தில் சேர்ந்து செபித்தனர்.
உரோம் நகரில் மூன்று நாள் பயணத்தைத் தொடங்கியுள்ள அர்மேனியத் திருஅவையின் தலைவர் திருத்தந்தை முதலாம் Aram அவர்கள், வத்திக்கானில் பல்வேறு துறைகளைப் பார்வையிடுவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.