2014-06-05 16:53:11

ஜூன் 5, உலக சுற்றுச்சூழல் தினம்


ஜூன்,05,2014. “உங்கள் குரல்களை உயர்த்துங்கள், கடல்மட்ட அளவு அல்ல” என்ற சுலோகத்துடன் ஜூன் 5, இவ்வியாழனன்று உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
உலக வெப்பநிலை மாற்றத்தால் அச்சுறுத்தும் ஆபத்தை எதிர்நோக்கி வருகின்ற, கரீபியன் தீவு நாடாகிய பார்படோசில் இவ்வாண்டின் உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன், வெப்பநிலை மாற்றத்தால் சிறிய தீவு நாடுகள் எதிர்நோக்கும் ஆபத்துக்கள் குறித்து எச்சரித்துள்ளார்.
“சிறிய தீவு வளரும் நாடுகளின் ஆண்டு” என 2014ம் ஆண்டு சிறப்பிக்கப்படுவது குறித்து சுட்டிக்காட்டியுள்ள பான் கி மூன் அவர்கள், சிறிய தீவு நாடுகளைப் பாதுகாப்பதற்கு உலக சமுதாயத்துக்கு இருக்கும் கடமையைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய தீவு நாடுகளில் 6 கோடியே 23 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.
உலக சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில் 1972ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி ஐ.நா. பொது அவை, ஐ.நா.சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியது.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.