2014-06-04 14:59:16

திருத்தந்தை பிரான்சிஸ் - இயேசு தன் காயங்களைத் தந்தையிடம் காட்டி, நமக்காகப் பரிந்து பேசியுள்ளார்


ஜூன்,04,2014. இயேசு தன் தந்தையிடம் செபிக்கும்போது, அதிக வார்த்தைகளை வெளிப்படுத்தாமல், தன் அன்பை வெளிப்படுத்தினார் என்றும், தன் அன்பின் விலையாகப் பெற்ற காயங்களைத் தந்தையிடம் காட்டி, நமக்காகப் பரிந்து பேசியுள்ளார் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலை ஆற்றியத் திருப்பலியில், இயேசு தன் சீடர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றதையும், திருத்தூதர் பவுல் மிலேத்து எனும் இடத்திலிருந்து விடைபெற்றுச் சென்றதையும் மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கினார்.
கடந்த ஞாயிறன்று புனித பேதுரு வளாகத்தில், தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறிய எண்ணத்தை மீண்டும் நினைவுறுத்தியத் திருத்தந்தை அவர்கள், இயேசுவின் காயங்கள் தந்தைக்கு முன் நமக்காகப் பரிந்துபேசுகின்றன என்று எடுத்துரைத்தார்.
தன் பாடுகளின்போது இயேசு ஏற்றுக்கொண்ட சாட்டையடி காயங்களும், ஏனைய காயங்களும் மறைந்துவிட்ட அவரது உடலில், ஐந்து காயங்களை மட்டும் இயேசு விண்ணகம் எடுத்துச் சென்று தந்தையிடம் காண்பித்தார் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
மனிதர்களின் பாவங்களுக்காக இயேசு கொடுத்த விலையே அக்காயங்கள் என்பதைத் தந்தையிடம் காட்டி, நம் பாவங்களுக்கு அவர் கழுவாய் தேடினார் என்பதையும் திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.