மே,27,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமியில் மேற்கொண்ட மூன்று நாள் திருப்பயணத்தை
நிறைவு செய்து, உரோம் நகருக்குத் திரும்பியுள்ளார். ஜோர்டான், பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய
மூன்று நாடுகளில் அவர் மேற்கொண்ட பயணத்தின் தாக்கங்களை, சிறிது காலம் பொறுத்திருந்து
பார்க்கவேண்டும். ஏற்கனவே மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழும் மக்களின் மனங்களில்
நம்பிக்கை விதைகள் விதைக்கப்பட்டுள்ள மகிழ்ச்சியைக் காணமுடிகிறது. Ecumenical கிறிஸ்தவ
சபை முதுபெரும் தந்தை, Athenagoras அவர்களுக்கும், திருத்தந்தை 6ம் பவுல் அவர்களுக்கும்
இடையே எருசலேமில் இடம்பெற்ற சந்திப்பின் 50ம் ஆண்டு நிறைவில், தற்போது, திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களுக்கும், தற்போதைய Ecumenical சபை முதுபெரும் தந்தை, Bartholomeo அவர்களுக்கும்
இடையே இடம்பெற்ற சந்திப்பும், கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான நம்பிக்கையை விதைத்துள்ளது. அமைதிக்காக,
திருத்தந்தையுடன் இணைந்து செபிக்க, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அரசுத் தலைவர்கள், வத்திக்கான்
வருவதற்கு திருத்தந்தை விடுத்த அழைப்பிற்கு, இரு அரசுத் தலைவர்களும் இசைவு தந்திருப்பது
மற்றொரு நம்பிக்கை. இவ்வாறு, பல நம்பிக்கை விதைகளை இத்திருப்பயணம் விதைத்துள்ள வேளை,
அதன் பலனைக் காண, நாம் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.