திருத்தந்தையின் புனித பூமி பயணம் முதல் நாள் - ஜோர்டான்: திருப்பலியில் வழங்கிய மறையுரை
மே,24,2014. இன்றைய நற்செய்தியில், "உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை
உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன்" (யோவான் 14: 16) என்று இயேசு தன் சீடர்களுக்கு
அளித்த வாக்குறுதியைக் கேட்டோம். முதல் துணையாளர், இயேசு; மற்றொரு துணையாளர், தூய ஆவியார். யோவானிடம்
திருமுழுக்கு பெற்ற நாசரேத்து இயேசுவின் மீது, தூய ஆவியார் சக்தியுடன் இறங்கிவந்த யோர்தான்
நதிக்கரைக்கு அருகில் நாம் இருக்கிறோம். இறைவன் தன் அருளால், என்னை ஒரு திருப்பயணியாக
இவ்விடம் அழைத்து வந்துள்ளார். தூய ஆவியாரையும், அவர், இயேசுவிலும், நம்மிலும் கொணர்ந்துள்ளவற்றையும்
தியானிக்க, யோர்தான் நதிக்கரையும், இன்றைய நற்செய்தியும் நம்மை அழைக்கின்றன. தூய ஆவியார்
மூன்று செயல்களை ஆற்றுகிறார் - அவையாவன: அவர், ஏற்பாடு செய்கிறார், அருள் பொழிவு செய்கிறார்,
அனுப்புகிறார். கடவுளின் ஊழியரான இயேசு, தன்னை முழுவதும் பகிர்ந்தளிக்கும் பணிக்கு
அவரை ஏற்பாடு செய்யும் வண்ணம், தூய ஆவியார், அவர் மீது இறங்கினார். மீட்பு வரலாற்றின்
துவக்கத்திலிருந்தே பிரசன்னமாகியிருக்கும் தூய ஆவியார், இயேசுவின் வருகைக்கு, நாசரேத்து
மரியாவை ஏற்பாடு செய்தார் (காண்க. லூக்கா 1:35). குழந்தை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த
வேளையில், சிமியோன், அன்னா என்ற இருவரையும், இயேசுவைச் சந்திக்கும்படி ஏற்பாடு செய்தவர்,
தூய ஆவியார் (காண்க லூக்கா 2:22). எனவே, இவ்விருவரும் கோவிலில் குழந்தையைக் கண்டதும்,
அவர் வடிவில் மீட்பரைச் சந்தித்தனர். மீட்பரை மக்கள் சந்திப்பதற்கு, சிமியோன், அன்னா
இருவரும் பிரதிநிதிகளாக விளங்குகின்றனர். தூய ஆவியார் ஏற்பாடு செய்யும் அனைத்துச்
செயல்பாடுகளும் அமைதியை உருவாக்குதல் என்ற அடிப்படையைக் கொண்டவை. அமைதியின் ஊற்றான தூய
ஆவியாரிடம், பல்வேறுபட்ட மக்களிடையே அமைதியை உருவாக்கவேண்டும் என்ற மன்றாட்டை எழுப்புவோம். தூய
ஆவியார் அருள் பொழிவு செய்கிறார். அவர் இயேசுவையும், அவரது சீடர்களையும் அருள் பொழிவு
செய்து, அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் எண்ணம் கொண்டு, ஒருங்கிணைய உதவினார். நம்மை அவர்
அருள் பொழிவு செய்வதால், கிறிஸ்துவின் புனிதத்தில் பங்கு தருகிறார். எனவே, நாம் பணிவான
உள்ளத்துடன், மன்னிப்பு, ஒப்புரவு, உடன்பிறந்த உணர்வு ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும்.
உறுதியான, நிலையான அமைதிக்கு இவை அனைத்தும் தேவையான கூறுகள். நம்மிடம் உள்ள பிரிவுகளையும்,
மன வருத்தங்களையும் ஒதுக்கிவைத்து, ஒவ்வொருவரையும் உடன்பிறப்பென ஏற்கும்போது, கிறிஸ்துவைப்
போல் வாழ்கிறோம். இதையே இயேசு இன்றைய நற்செய்தியின் வழி நம்மிடம் கேட்கிறார் “நீங்கள்
என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும்
இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன்.” (யோவான்
14: 15-16) இறுதியாக, தூய ஆவியார் அனுப்புகிறார். தூய ஆவியாரால் நிறைக்கப்பட்டு, அனுப்பப்பட்ட
இயேசுவைப் போல், நாமும் தூய ஆவியாரால் அனுப்பப்படுகிறோம், அமைதியின் சான்றுகளாய், தூதர்களாய்
அனுப்பப்படுகிறோம். அமைதியை நாம் கடைச் சரக்காக வாங்கமுடியாது, அதை பொறுமையாகத் தேட
வேண்டும். நம் ஒவ்வொருநாள் வாழ்வின், பெரிதும் சிறிதுமான செயல்கள் வழியே, அமைதியை உருவாக்கவேண்டும்.
நாம் அனைவரும் ஒரே விண்ணகத் தந்தையின் மக்கள் என்ற எண்ணம் அமைதியை நம்மிடையே உறுதி செய்யும்
அடிப்படை எண்ணம். இத்தகைய மனநிலையுடன் நான் உங்கள் அனைவரையும் அரவணைக்கிறேன். முதுபெரும்
தந்தை, சகோதர ஆயர்கள், அருள் பணியாளர், இருபால் துறவியர், இறைமக்கள், அனைத்துக் குழந்தைகள்,
குறிப்பாக, இன்று புதுநன்மை பெறும் குழந்தைகள் அனைவரையும் நான் அரவணைக்கிறேன். பாலஸ்தீனம்,
சிரியா, ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள கிறிஸ்தவர்களை அரவணைக்கிறேன்.
உங்களுடைய குடும்பங்களுக்கு என் வாழ்த்துக்களை எடுத்துச் செல்லுங்கள். அவர்களுக்கு அருகில்
நான் இருக்கிறேன் என்ற உறுதியை எடுத்துச் செல்லுங்கள். அன்பு நண்பர்களே! இவ்வுலகை
சாவிலிருந்தும், பாவத்திலிருந்தும் மீட்கும் பணியை இயேசு தொடங்குவதற்கு, தூய ஆவியார்
யோர்தானில் அவர் மீது இறங்கினார். நமது சகோதர, சகோதரிகளைச் சந்திப்பதற்கு தூய ஆவியார்
நம்மை ஏற்பாடு செய்யவேண்டுமென மன்றாடுவோம். அரசியல் எண்ணம், மொழி, கலாச்சாரம், மதம் என்பனவற்றில்
வேரூன்றிய வேறுபாடுகளை நாம் மேற்கொள்ள, தூய ஆவியார் நம்மை ஏற்பாடு செய்யவேண்டுமென மன்றாடுவோம். தூய
ஆவியார் தன் கருணை எனும் எண்ணெயால் நம் அனைவரையும் அருள் பொழிவு செய்யவேண்டுமென மன்றாடுவோம்.
நமது தவறான எண்ணங்கள், கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள
காயங்களை தன் கருணை எண்ணெயால் அர்ச்சித்து குணமாக்க தூய ஆவியாரிடம் வேண்டுவோம். பணிவோடும்,
மென்மையோடும் அமைதியைத் தேடுபவர்களாக, தூய ஆவியார் நம்மை அனுப்பும்படி மன்றாடுவோம்.