இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளுக்கிடையே அமைதி ஒப்பந்தம் உருவாக வேண்டும்
என்ற கோரிக்கையோடு, துவக்கப்பட்டுள்ள முகநூல் தளம்
மே,22,2014. இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கிடையே அமைதி ஒப்பந்தம் ஒன்று உருவாக
வேண்டும் என்ற கோரிக்கையோடு, துவக்கப்பட்டுள்ள 'Yala Young Leaders' என்ற முகநூல் (facebook)
தளத்தில் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இந்த
முகநூல் இயக்கத்தை உருவாக்கியுள்ள குழுவினர், இத்திங்களன்று வெளியிட்ட ஒரு செய்தியில்,
"மத்தியக் கிழக்குப் பகுதியில், எதிர்காலத்தில் வாழப்போவது இளையோரே; எனவே, அவர்களது கருத்துக்களை
அனைவரும் கேட்கவேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. கடந்தக் காலத்தில், இஸ்ரேல், பாலஸ்தீனம்
ஆகிய நாடுகளின் தலைவர்களும், உலகத் தலைவர்களும் கூறிய கருத்துக்கள், ஒலி-ஒளி வடிவில்
இந்த முகநூல் தளத்தில் பதியப்பட்டுள்ளது என்றும், இத்தலைவர்கள் கூறிய வார்த்தைகள் ஏன்
இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்ற கேள்வியும் இந்த வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமை முதல், அடுத்தத் திங்கள் முடிய புனித பூமியில் மேற்கொள்ளும்
பயணத்தின்போது, இளையோர் மேற்கொண்டுள்ள இந்த முகநூல் இயக்கம் இன்னும் தீவிரமடையும் என்ற
எதிர்பார்ப்பு எழுந்துள்ளதென்று ஆசியச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.