2014-05-20 15:50:43

திருத்தந்தை : நம் இதயங்கள் கலங்கிட தூய ஆவி அனுமதிப்பதில்லை


மே 20,2014. பணத்திலும் அதிகாரத்திலும் நம்பிக்கை வைப்போர் பெறுகின்ற தற்காலிக நிம்மதிகளைவிட தூய ஆவியாரை, தங்கள் வாழ்வில் வரவேற்போர் பெறுகின்ற அமைதி நிலையானது மற்றும் உறுதியானது என இச்செவ்வாய்க்கிழமை காலை, சாந்தா மார்த்தா இல்லத் திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பணமும், அதிகாரமும் தரும் அமைதி எந்நேரமும் அழிந்துபோகலாம், ஆனால் தூய ஆவியார் வழங்கும் அமைதியோ நிலையானது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்த்த இயேசு நமக்கு வழங்கியவரே இந்த தூய ஆவியார் எனவும் கூறினார்.
உலோகம் துருப்பிடிப்பது போலவும், பங்குச்சந்தை சரிவது போலவும் செல்வம் திடீரென்று மறைந்து போகலாம், அதிகாரம் தரும் அமைதிகூட ஆட்சிக் கவிழ்ப்புகளால் மறைந்து போகலாம், ஆனால் இறைவன் தரும் அமைதியான, தூய ஆவியார் எனும் கொடை மறைந்து போகாது எனவும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருமுழுக்கிலும், உறுதிப்பூசுதலிலும் நாம் பெற்ற தூய ஆவியார் எனும் அமைதிக்கொடை, நம்மிடம் பத்திரமாக இருக்கும்வரை நம் இதயங்கள் கவலையுறவேண்டாம் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.