2014-05-17 17:03:53

கிறிஸ்தவர் ஒருவரை மணந்த ஒரே காரணத்திற்காக, சூடான் நாட்டில் இளம் பெண் மருத்துவருக்கு மரண தண்டனை


மே,17,2014. கிறிஸ்தவர் ஒருவரை மணந்த ஒரே காரணத்திற்காக சூடான் நாட்டில் 27 வயது நிறைந்த பெண் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது அந்நாட்டு நீதி மன்றம்.
ஓர் இஸ்லாமியத் தந்தைக்கும், கிறிஸ்தவ அன்னைக்கும் மகளாகப் பிறந்த சூடான் நாட்டு இளம் மருத்துவர் மரியம் யாஹ்யா இப்ராஹிம் அவர்கள், தன் இளம் வயது முதல் தந்தையின்றி, அன்னையின் அரவணைப்பில் வாழ்ந்தவர்.
தந்தையின்றி இவர் வாழ்ந்தபோதிலும், இவரது தந்தை இஸ்லாமியர் என்பதால், இளம்பெண் இப்ராஹிம் அவர்களையும் இஸ்லாமியர் என்றே கருதி, சூடான் நீதி மன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
கிறிஸ்தவராக வாழ்ந்தாலும், இஸ்லாமியத் தந்தைக்குப் பிறந்தவர் என்பதால், இளம் மருத்துவர் இப்ராஹிம் அவர்கள் தற்போது ஒரு கிறிஸ்தவரை திருமணம் செய்துள்ளது செல்லாது என்று நீதி மன்றம் கூறியுள்ளது.
மேலும், இவர் கிறிஸ்தவருடன் வாழ்ந்து கர்ப்பம் தரித்திருப்பது, திருமணத்திற்கு வெளியே நிகழ்ந்த உறவு என்று தீப்பளித்துள்ள சூடான் நீதிமன்றம், மரியம் இப்ராஹிம் அவர்களுக்கு 100 கசையடிகளையும், சாகும்வரை தூக்கிலிடுதலையும் தண்டனையாக வழங்கியுள்ளது.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.