திருத்தந்தை பிரான்சிஸ், ஆசியக் கத்தோலிக்கக் குடும்பங்களுக்கு அழைப்பு
மே,15,2014. கிறிஸ்துவின் அன்பைப் பரப்பும் வகையில் கிறிஸ்தவக் குடும்பங்கள் புளிப்பு
மாவாக இவ்வுலக மக்களிடையே செயலாற்றவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆசியக்
கத்தோலிக்கக் குடும்பங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மே 8, இப்புதன் முதல், வெள்ளி
முடிய, பிலிப்பின்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் நடைபெறும் கத்தோலிக்கக் குடும்பங்களின்
ஆசிய மாநாட்டிற்கு செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கை, ஒற்றுமை
என்ற அனுபவங்களில் கிறிஸ்தவக் குடும்பங்கள் வளரவேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டுள்ளார். "ஆசியாவின்
குடும்பங்கள்: எதிர்நோக்கின் ஒளிகள்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மூன்று நாள் கூட்டத்தை,
குடும்பப்பணி திருப்பீட அவையின் செயலர், ஆயர் Jean Laffitte அவர்கள் துவக்கி வைத்தார். குடும்பப்பணி
திருப்பீட அவையும், பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையும் இணைந்து நடத்தும் இந்தக் கூட்டத்தில்,
இந்தோனேசியா, லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், தாய்வான்
ஆகிய நாடுகளிலிருந்து ஆயர்கள், குருக்கள் மற்றும் பொதுநிலையினர் கலந்து கொள்கின்றனர்.