2014-05-14 16:34:18

திருத்தந்தை மேற்கொள்ள விருக்கும் புனித பூமி பயணத்தில் உலக மக்கள் அனைவரும் இணையவேண்டும் - புனித பூமியில் பராமரிப்புப் பணித் தலைவர்


மே,14,2014. வரலாற்றில் தன்னை வெளிப்படுத்திய இறைவன், உலகின் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில், அதாவது, புனித பூமியில், தன்னை மனித குடும்பத்தில் இணைத்தார் என்று புனித பூமியில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அருள் பணியாளர் Pierbattista Pizzaballa அவர்கள் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் புனித பூமி பயணத்தையொட்டி, உலக மக்கள் அனைவரும் இந்தப் பயணத்தில் இணையவேண்டும் என்ற வேண்டுகோளுடன், அருள் பணியாளர் Pizzaballa அவர்கள் ஒலி-ஒளிச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
வரலாற்றில் தன்னையே இணைத்துக்கொண்ட இறைமகன் இயேசுவைச் சந்திக்க, ஒரு திருப்பயணியாக வரும் திருத்தந்தையுடன் மக்கள் அனைவரும் இணைய வாருங்கள் என்ற அழைப்பை விடுக்கும் அருள் பணியாளர் Pizzaballa அவர்கள், இப்பயணத்தின் ஒரு முக்கிய நோக்கமாக விளங்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பிற்காகவும் செபிப்போம் என்று விண்ணப்பித்துள்ளார்.
புனித பூமி பராமரிப்புப் பணி அமைப்பும், இஸ்ரேல் நாட்டின் சுற்றுலாத் துறையும் இணைந்து, உருவாக்கியுள்ள இச்செய்தி, ஆங்கிலம், இத்தாலியம், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானியம், போர்த்துகீசியம், போலந்து ஆகிய ஏழு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.