2014-05-14 16:33:40

எரிந்துகொண்டிருக்கும் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு உங்கள் செபங்களாலும் வேறு வழிகளாலும் உதவ வாருங்கள் - எருசலேம் முதுபெரும் தந்தை Twal


மே,14,2014. எரிந்துகொண்டிருக்கும் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு உங்கள் செபங்களாலும் வேறு வழிகளாலும் உதவ வாருங்கள் என்ற அழைப்பை, எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் விடுத்தார்.
மே 13, இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட பாத்திமா அன்னை திருநாளன்று, அத்திருத்தலத்தில் திருப்பலியாற்றிய முதுபெரும் தந்தை Twal அவர்கள், உலக அமைதியைக் கொணர்ந்த இளவரசர் இயேசு பிறந்த பூமியில் அமைதி நிலவ செபங்கள் அதிக அளவு தேவைப்படுகின்றன என்று கூறினார்.
பாத்திமா அன்னை திருநாளையொட்டி, அத்திருத்தலத்தில் கூடியிருந்த 35000த்திற்கும் அதிகமான திருப்பயணிகளிடம் முதுபெரும் தந்தை Twal அவர்கள், மறையுரையாற்றுகையில், இம்மாத இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பூமிக்கு மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்தைக் குறித்தும் பேசினார்.
அருளையும் அமைதியையும் புனித பூமியில் வளர்க்க திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் இந்தப் புனிதப் பயணம் வெற்றிகரமாக அமைய அனைவரும் செபத்தில் இணைவோம் என்ற வேண்டுகோளையும் முதுபெரும் தந்தை Twal அவர்கள், திருப்பயணிகளுக்கு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.