2016ல் ஆஸ்துமா நோயாளிகள் எண்ணிக்கை 3.50 கோடியாக அதிகரிக்கும்'
மே 13,2014. 'வரும் 2016ம் ஆண்டிற்குள், இந்தியாவில் ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை,
3.50 கோடியாக அதிகரிக்கும்' என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலகில் ஆஸ்துமா குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மே மாத முதல் செவ்வாய்க்கிழமையன்று, உலக ஆஸ்துமா
தினமாக கொண்டாடப்பட்டதையொட்டி . சென்னை சுவாச ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர்
நரசிம்மன் கூறுகையில், நம் நாட்டில், 2006ம் ஆண்டு, 2.8 கோடியாக இருந்த ஆஸ்துமா நோயாளிகள்
எண்ணிக்கை, 2016ல், 3.5 கோடியாக மாற வாய்ப்புள்ளது என்றார். காற்றில் இருக்கும் புகை,
மாசு மற்றும் சில வகை உணவுகள் கூட, ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வாமையாக மாறுவதற்கான
வாய்ப்புகள் உள்ளன என்றும், ஆஸ்துமா குறித்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக சிகிச்சை
மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் கூறினார் மருத்துவர் நரசிம்மன். ஆஸ்துமாவுக்கு,
'இன்ஹேலர்'கள் நுகரப்படுவது முக்கிய மருத்துவ முறையாக உள்ளது என்பதையும் வலியுறுத்திய
மருத்துவர் நரசிம்மன், ஆஸ்துமா குறித்து விழிப்புணர்வே, அதிலிருந்து மீள சிறந்த வழி,
அதைத்தான் எங்கள் அறக்கட்டளை மூலம், செய்து வருகிறோம் என மேலும் தெரிவித்தார்.