2014-05-12 16:13:19

மே 13,2014 புனிதரும் மனிதரே : தெய்வத்தின் தண்டனை உடனடியாகவும் வருகிறது(செபாஸ்தே 40 மறைசாட்சிகள்)


கி.பி.320ம் ஆண்டில் கான்ஸ்ட்டைன் பேரரசர் உலகின் மேற்கிலும், லிசினியுஸ் பேரரசர் உலகின் கிழக்கிலும் ஆட்சிசெய்து வந்தனர். பேரரசர் கான்ஸ்ட்டைனின் வற்புறுத்தலால் லிசினியுஸ் பேரரசர் தனது ஆட்சிப் பகுதியில் கிறிஸ்தவத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார். இதற்காக இவ்விரு பேரரசர்களும் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டனர். அதன்படி பேரரசர் கான்ஸ்ட்டைனின் சகோதரி Constantia, லிசினியுஸ் பேரரசருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார். ஆனால் லிசினியுஸ் பேரரசர் இந்த ஒப்பந்தத்தை மீறி கிறிஸ்தவத்தைத் தடைசெய்ய மீண்டும் முயற்சி செய்தார். அவரது ஆட்சியில் இருந்த படைவீரர்கள் அனைவரும் கிறிஸ்தவத்தை மறுதலிக்க வேண்டும் அல்லது துன்புறுத்தப்பட்டு இறக்க நேரிடும் என எச்சரித்தார். அச்சமயத்தில், அர்மேனியாவின் Sebasteக்கு அருகில் பாளையம் இறங்கியிருந்த "Thundering Legion," என்ற இராணுவப்பிரிவிலிருந்து நாற்பது உரோமைப் படைவீரர்கள் கிறிஸ்தவத்தை மறுதலிக்க மறுத்துவிட்டனர். துருக்கி நாட்டில் உள்ள தற்போதைய Sivas நகரமே அக்காலத்திய Sebaste நகரமாகும். அன்பான பேச்சு, கடும் அச்சுறுத்தல்கள், பலத்த அடிகள் எதுவும் இந்த நாற்பது படைவீரர்களையும் அசைக்கவில்லை. ஒருபக்கமாக தோலை உரித்தனர். அதிலும் மசியவில்லை. பின்னர் ஒருநாள் மாலையில் அவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு பனி உறைந்த ஏரியின் நடுவில் போடப்பட்டனர். "நீங்கள் விசுவாசத்தை மறுதலித்தால் கரைக்கு வரலாம்" எனவும் சொல்லப்பட்டனர். அவர்களுக்குச் சோதனைதரும் நோக்கத்தில், ஏரிக்கரையில் நெருப்பு மூட்டப்பட்டது. வெந்நீர் குளியல் வசதிகளும், கம்பளிகளும், ஆடைகளும், சுடச்சுட உணவும், குடிபானங்களும் வைக்கப்பட்டன. இரவு நெருங்க நெருங்க, 39 பேர் உறுதியாக இருந்தனர். ஆனால் ஒருவர் கரைக்கு வந்துவிட்டார். அவர் வெந்நீரில் குளித்தார். உடனடியாக இறந்துவிட்டார். மற்ற 39 படைவீரர்களின் உறுதியைக் கண்ட, கரையில் காவலில் இருந்தவர்களில் ஒருவர், தனது உடைகளைக் கழற்றிவிட்டு அந்த 39 பேருடன் போய் படுத்துக்கொண்டார். புதியவரை மற்றவர்கள் ஆவலோடு வரவேற்றனர். பொழுது விடிந்தபோது உயிரோடு இருந்தவர்கள் குத்திக்கொலை செய்யப்பட்டனர். இந்த நாற்பது மறைசாட்சிகளின் விழா மார்ச் 09.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.