2014-05-10 16:25:40

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் கைவிடப்பட்டுள்ளனர்: நியூயார்க் டைம்ஸ் குற்றச்சாட்டு


மே 10,2014. தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகள் கைவிடப்பட்டிருப்பதாக தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்திய அமைதிப்படையினர் இலங்கைக்கு வந்த காலம் முதல் தமிழகத்துக்கு இடம் பெயர்ந்து வந்த இலங்கைத் தமிழர்கள் கடந்த 30 வருடங்களாக தமிழகத்தில் அகதிகளாகவே வாழ்கின்றனர் எனக்கூறும் இந்த நாளிதழ், ஒவ்வொரு தேர்தலின் போதும் அவர்களுக்கு ஒரு விடிவு பிறக்கும் என்ற எதிர்பார்ப்பும், கனவும் எப்போதும் நிராசையாகவே போகிறது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், இலங்கைத் தமிழர்கள் ஆங்கில மொழி அறிவு உள்ளிட்ட பல்வேறு திறமைகளைக் கொண்டுள்ள போதிலும், இன்னும் அவர்கள் கூலித் தொழிலாளர்களாக பணியாற்ற வேண்டிய நிலை காணப்படுகிறது எனவும் அந்நாளிதழ் தெரிவித்துள்ளது.
இம்முறையும் தமிழகத்தின் வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பல முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளுக்கான எந்த முன்னேற்ற அறிவிப்புகளும் இல்லை என தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குற்றம் சாட்டியுள்ளது.

ஆதாரம் : TamilWin








All the contents on this site are copyrighted ©.