கர்தினால் பரோலின்: இறைவன் நம்மைச் சுற்றி வழங்கியுள்ள அருள்கொடைகளை கண்டுகொள்வோம்
மே 07,2014. கடவுள் நம்மைச் சுற்றி வழங்கியுள்ள பல்வேறுவிதமான அருள்கொடைகளைக் கண்டுகொள்ளாமல்
இருக்கும் சோதனைகளுக்கு நாம் பலமுறை உள்ளாக்கப்படுகிறோம் என இப்புதனன்று சுவிஸ் மெய்க்காப்பாளர்களுக்கு
நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின். சுவிஸ்
மெய்க்காப்பாளர் படையில் புதிதாக அங்கத்தினர்கள் இணைந்துள்ளதையொட்டி அவர்களுக்கு திருப்பலி
நிறைவேற்றிய கர்தினால் பரோலின், இயேசுவின் மேல் விசுவாசம் கொள்ள அவரிடம் புதுமைகளை எதிர்பார்த்த
யூதர்களைப் பற்றி தன் மறையுரையில் எடுத்துரைத்து, விண்ணக அப்பமாகிய இயேசு தன்னையே முழுமையாக
நமக்குக் கையளித்ததையே அவர்களால் கண்டுகொள்ளமுடியவில்லை என்றார். தோற்றங்களையும் தாண்டி
அவர் வார்த்தையில் இருக்கும் உண்மையான அர்த்தத்தைக் கண்டுகொள்ள இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார்
எனவும் கூறினார் கர்தினால். 1527ம் ஆண்டு திருத்தந்தையை காப்பாற்றும் முயற்சியில்
147 சுவிஸ் மெய்க்காப்பாளர்கள் கொல்லப்பட்டதையும் தன் மறையுரையில் நினைவுகூர்ந்த கர்தினால்
பரோலின், இது அவர்களின் தராளமனப்பான்மையையும் ஆன்மீக மதிப்பீடுகளையும் வெளிப்படுத்துவதாக
உள்ளது என்றார்.