சுவிஸ் மெய்க்காப்பாளர்களிடம் திருத்தந்தை : 'உங்கள் அர்ப்பணப் பணிக்கு நன்றியுள்ளவனாக
உள்ளேன்'
மே 05,2014. 1527ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி திருத்தந்தையையும் திருஅவையையும் காப்பாற்ற
நடத்தப்பட்ட போராட்டத்தில் 147 சுவிஸ் மெய்க்காப்பாளர்கள் இறந்த தினத்தை நினைவுகூறும்
வகையில் இத்திங்களன்று சுவிஸ் மெய்க்காப்பாளர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கினார்
திருத்தந்தை பிரான்சிஸ். வத்திக்கானையும் தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தையும் சந்திக்க
வரும் திருப்பயணிகளின் பாதுகாப்பிலும் கிறிஸ்தவ சாட்சியத்திலும் சிறப்புடன் செயலாற்றும்
சுவிஸ் மெய்க்காப்பாளர்களுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ்,
விசுவாசத்தில் உறுதியாக இருந்து, பிறரன்பில் தாராளமாகச் செயல்படுமாறு அவர்களை கேட்டுக்கொண்டார். திருத்தந்தையின்
சுவிஸ் மெய்க்காப்பாளர்கள் அணியும் பலவண்ண சீருடை, அவர்களின் அர்ப்பணம், நம்பகத்தன்மை
மற்றும் பாதுகாப்புத்திறனின் அடையாளமாக உள்ளது என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ்,
அவர்களின் அர்ப்பணப் பணிக்கு தான் நன்றியுள்ளவனாக உள்ளேன் என்று மேலும் கூறினார்.