பிரேசில் நாட்டைச்
சேர்ந்த Alvaro Weyne என்ற வர்த்தகர் ஒருவருக்கு திடீரென பத்து இலட்சம் ரூபாய் வந்து
சேர்ந்தது. தன் அலுவலக அறையில் அதைப் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்ல விரும்பினார்.
மிகவும் பாதுகாப்பான இடம், தன் மேசைக்குக் கீழ் இருக்கும் குப்பைத் தொட்டிதான், அதை யாரும்
தொடமாட்டார்கள் என்று அவர் தீர்மானித்து, பணத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, குப்பைத்
தொட்டியின் அடிப்புறத்தில் அதை ஒளித்து வைத்தார். அவர் தன் அறையை விட்டு வெளியேச்
சென்றிருந்த நேரம், அவர் அறையைச் சுத்தம் செய்யவந்த துப்புரவுத் தொழிலாளி, அந்தக் குப்பைத்
தொட்டியில் இருந்தவற்றை மற்றொரு பெரிய குப்பைத் தொட்டியில் கொட்டி, வெளியே எடுத்துச்
சென்றார். இது கற்பனைக் கதை அல்ல, ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அந்நாட்டில் வெளியான
ஒரு செய்தி. இச்செய்தியை வாசித்த John Davies என்ற கிறிஸ்தவப் போதகர், இதன் தொடர்ச்சியாக
மற்றொரு கற்பனைக் கதையை இணைத்துள்ளார். பிரேசில் நாட்டில் ஒரு சேரியில் மிகுந்த வறுமையில்
வாழ்பவர், Enrico. ஒவ்வொரு நாளும், நகரில் இருந்த குப்பைத் தொட்டிகளில் கிடைக்கும் பொருட்களைச்
சேகரித்து அவர் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருபவர். அன்று, அவர் அந்த அலுவலகத்தின்
அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் தேடியபோது, ஒரு 'பிளாஸ்டிக்' பையைப் பார்த்தார்.
திறந்தபோது, அதில் இருந்த பத்து இலட்சம் ரூபாய் அவரைப் பார்த்துச் சிரித்தது.
இந்த
உண்மைச் செய்தியும், அதைத் தொடரும் கற்பனைக் கதையும் நம் வாழ்வின் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றன.
நம்மை வந்தடையும் கொடைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், சரியாகப் பாதுகாக்காமல், அவற்றை
இழந்து விடுகிறோம். வேறு சில நேரங்களில், நாம் முற்றிலும் எதிர்பாராத நேரங்களில், பெரும்
மகிழ்வைத் தரும் கொடைகளை நாம் பெறுகிறோம். தவறவிட்டதால் தவிப்பு, வியப்படையவைக்கும் மகிழ்வு
என்ற இவ்விரு உணர்வுகள், இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகின்றன. எம்மாவு என்ற ஊரை நோக்கிச்
சென்ற இரு சீடர்கள் அடைந்த அனுபவம் இன்றைய நற்செய்தியாக ஒலிக்கிறது. (லூக்கா 24: 13-35)
இவ்வுலகிற்கு
வழங்கப்பட்ட உன்னதக் கொடையான இயேசுவையும், அவரது உண்மையான வல்லமையையும் சீடர்கள் சரியாகப்
புரிந்து கொள்ளவில்லை. இறைவனின் அரசை இயேசு நிறுவுவார் என்று சீடர்கள் எதிர்பார்த்து
காத்திருந்தனர். அந்த உச்சகட்ட எதிர்பார்ப்பில், இயேசு பரிதாபமாய் கொலை செய்யப்பட்டு
இறந்ததும், ஏமாற்றம் அதிகம் உருவானது. அந்த ஏமாற்றத்தில் சீடர்கள் பலரும் மனம் உடைந்து,
பயந்து, பதுங்கி, ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்களோடு பார்த்தபடி, காலத்தைக் கடத்தினர்.
அவர்கள் மத்தியில் வாழ்ந்த பெண்கள், இன்னும் நம்பிக்கையை இழக்காமல், துணிவோடு கல்லறைக்குச்
சென்றனர். உயிர்ப்பின் நற்செய்தி அவர்களுக்கு முதலில் வழங்கப்பட்டது. 'கலிலேயாவுக்குச்
செல்லுங்கள், அங்கு மீண்டும் இயேசுவைக் காண்பீர்கள்' என்ற செய்தி பெண்கள் வழியே சொல்லப்பட்டது.
இந்த நற்செய்தியைக் கேட்டும், கேட்காதது போல் தங்கள் துன்பத்தில் மூழ்கிய இருவர்,
இன்றைய நற்செய்தியின் நாயகர்கள். கலிலேயாவுக்குச் செல்லாமல், எம்மாவு என்ற ஊருக்குச்
சென்ற இரு சீடர்கள், விரக்தியின் உச்சியை அடைந்தவர்கள். நமது நாயகர்களில் ஒருவரது பெயர்
கிளயோப்பா என்று குறிக்கப்பட்டுள்ளது. (லூக்கா 24:18) மற்றவரது பெயர் குறிக்கப்படவில்லை.
அந்த இரண்டாவது சீடராக நம்மை இணைத்து, இப்பயணத்தைத் தொடர்வோம்.
எருசலேமுக்கும்
எம்மாவு என்ற ஊருக்கும் இடைப்பட்டத் தூரம் 11 கி.மீ. என்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது
(லூக்கா 24:13). இந்த தூரத்தை, நடைப் பயணமாகக் கடக்க இரண்டு மணி நேரங்கள் எடுத்திருக்கும்.
ஆனால், இந்த நடைப்பயணத்தை, நடைப் பிணங்களைப் போல மேற்கொண்ட அந்த இரு சீடர்களுக்கும் இந்தப்
பயணம் முடிவின்றி செல்வதுபோல் தெரிந்திருக்கும். இவ்விரு சீடர்களும் போகும் வழியில்
ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றனர் என்று நற்செய்தி கூறுகிறது. (லூக்கா 24:14)
என்ன பேசியிருப்பார்கள்? அவர்களது உள்ளக் குமுறல்கள் புலம்பல்களாக, கோபமான வார்த்தைகளாக
வெடித்திருக்கும். "நாங்கள் இவரை எவ்வளவோ நம்பினோம், இவரிடமிருந்து எவ்வளவோ எதிர்பார்த்தோம்.
ஆனால், இவ்விதம் ஆகிவிட்டதே..." என்ற குமுறல்கள் எழுந்திருக்கும். இவ்விரு சீடர்களின்
குமுறல்கள் பல தலைமுறைகளாய் நம் மத்தியில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டு தானே இருக்கின்றன?
நாம் எதிர்பார்த்தைவை கிடைக்காதபோது, நாம் எதிர்பாராதவை வந்து சேர்ந்தபோது நொறுங்கிப்போன
நேரங்களை நினைத்துப் பார்க்கலாம்.
நொறுங்கிய உள்ளத்துடன் நடந்து சென்ற சீடர்களுடன்
இயேசு நடக்க ஆரம்பித்தார். தாயன்போடு அவர்களைத் தேடிச் சென்ற இயேசு, கனிவோடு பேசுகிறார்,
கடிந்து கொள்கிறார், பொறுமையாய் விளக்குகிறார். அந்தத் தாய் இறுதியில் உணவைப் பரிமாறிய
அழகில் இவ்விரு சீடர்களின் கண்கள் திறக்கின்றன.
தங்களை வியப்படையச் செய்த மகிழ்வை,
மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அவ்விரு சீடர்களும் எருசலேமுக்கு விரைகின்றனர். "மாலை நேரம்
ஆயிற்று; பொழுதும் போயிற்று" (லூக்கா 24:29) தங்களை இருள் சூழ்ந்துகொண்டது என்று பலவாறு
புலம்பிக் கொண்டிருந்த அவர்கள் உள்ளங்கள், இந்த மகிழ்வால் ஒளிவெள்ளத்தில் மூழ்கின. வெளி
இருளைப் பற்றிய கவலை ஏதும் இல்லாமல், இரவோடு இரவாக, அவர்கள் இருவரும் எருசலேம் திரும்பிச்
சென்றனர். கனமான, உடைந்த உள்ளத்தைச் சுமந்து அவர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டபோது,
அவர்கள் கடந்து சென்ற 11 கி.மீ. தூரம், பல நூறு கி.மீ. போலத் தெரிந்திருக்கும். இப்போதோ,
அதே 11 கி.மீ.தூரம், 11 மீட்டர் தூரமாகத் தெரிந்திருக்கவேண்டும். வியப்பில் ஆழ்த்தும்
மகிழ்வுக்கு இந்த மந்திரச் சக்தி உண்டு.
"வியப்பில் ஆழ்த்தும் மகிழ்வு", அல்லது,
"வியப்படைய வைக்கும் மகிழ்வு" (Surprised by Joy) என்ற சொற்றொடர், கிறிஸ்தவ சிந்தனையாளர்,
C.S.Lewis (Clive Staples Lewis) அவர்கள் 1955ம் ஆண்டு வெளியிட்ட ஒரு நூலின் தலைப்பு.
இந்நூலில், அவர் தன் மனமாற்றத்தை விவரித்துள்ளார். கடவுள் நம்பிக்கையற்றவராக அவர் வாழ்ந்த
நாட்களில், இறைவன் அவரைத் தொடர்ந்தார் என்பதை அழகாகக் கூறியுள்ளார்: "ஒவ்வொரு நாளும்,
என் அறைக்குள் நான் தனிமையில், என் வேலைகளில் என்னையே புதைத்துக் கொண்டேன். அவ்வப்போது,
நான் புதைந்திருந்த வேலைகளிலிருந்து என் சிந்தனை சிறிது வெளியே எட்டிப் பார்த்தபோது,
அங்கு என்னைச் சந்திக்கக் காத்திருந்தார் கடவுள். யாரை நான் சந்திக்கக் கூடாது என்று
தீர்மானித்து, விலகிச் சென்றேனோ, அவர் என்னைத் தேடித் தேடி வந்தார்." சிறிது, சிறிதாக
Lewis மனம் மாறத் துவங்கினார். கோவில் வழிபாடுகளில் அரை மனதோடு கலந்துகொண்டார். இங்கிலாந்திலேயே,
தயங்கிய, சந்தேகப்பட்ட உள்ளத்துடன் வாழ்ந்த கிறிஸ்தவன் தான் ஒருவனாக மட்டுமே இருந்திருக்கவேண்டும்
என்று அவர் தன்னையே விவரித்துள்ளார். இறுதியில், அவரை இறைவன் முழுமையாக ஆட்கொண்ட அனுபவத்தை
அவர் இவ்விதம் விவரிக்கின்றார்: "நான் எப்போது என் இறுதித் தீர்மானத்தை எடுத்தேன்
என்பது நன்றாக நினைவிருக்கிறது. அன்று காலை நான் 'Whipsnade' உயிரியல் பூங்காவிற்குச்
சென்றுகொண்டிருந்தேன். பயணத்தைத் துவக்கியபோது, இயேசு கிறிஸ்து இறைவனின் மகன் என்பதை
நம்பாமல் இருந்தேன். அனால், நான் உயிரியல் பூங்காவை அடைந்தபோது, அந்த நம்பிக்கை உறுதி
அடைந்தது" என்று அவர் தன் இறுதி நம்பிக்கைப் பயணத்தைக் குறிப்பிட்டுள்ளார். Lewis விவரித்துள்ள
இந்த மனமாற்றக் காட்சியை வாசித்தபோது, ஓர் உயிரியல் பூங்காவிற்குச் செல்லும்போது மனமாற்றம்
ஏற்படக் கூடுமா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. மனமாற்றங்கள், இறைவனின் சந்திப்புக்கள்
எங்கும், எவ்வேளையிலும் நிகழும். இன்றைய நற்செய்தியில் நாம் காண்பது என்ன? இஸ்ரயேல் மக்களின்
உயிர் நாடியான கோவில் இருந்த எருசலேமில் இவ்விரு சீடர்களைச் சந்திக்காத இயேசு, அவர்கள்
எம்மாவு சென்ற வழியில் சந்தித்தார், மனமாற்றத்தைக் கொடுத்தார். திருத்தூதர் பவுல், கொலைவெறியுடன்
தமஸ்கு நகர் சென்றபோது, வழியில் அவரைச் சந்தித்தார், மனமாற்றம் தந்தார் (திருத்தூதர்
பணிகள் 9: 3-9). Lewisக்கு, உயிரியல் பூங்காவிற்குச் செல்லும் வழியில் மனமாற்றம் தந்தார்
இறைவன்.
மனமுடைந்து எம்மாவு சென்றாலும், மற்றவரை அழிக்கும் வெறியுடன் தமஸ்கு
நோக்கி படையெடுத்துச் சென்றாலும், உயிரின் ஊற்றான இறைவனைச் சந்திக்க மறுத்து, உயிரியல்
பூங்காவிற்குச் சென்றாலும்... சரி, எங்கெல்லாம் நாம் சென்றாலும், எந்த மனநிலையில்
நாம் இருந்தாலும், இறைவன் நம்முடன் பயணிக்கக் காத்திருக்கிறார். அந்தப் பயணத்தில் தன்னையே
நமக்குப் பகிர்ந்தளிக்க வருகிறார். தாயன்புடன் நம்மைத் தேடிவரும் உயிர்த்த கிறிஸ்துவை
நாம் அடையாளம் கண்டுகொள்ளத் தேவையான வரத்தை இந்த உயிர்ப்புக் காலத்தில் நாம் ஒவ்வொருவரும்
பெறுவோமாக!