2014-05-03 18:19:15

திருத்தந்தை : இயேசுவோடு நிலைத்திருந்து, நம்பிக்கையைப் பெற்று மகிழுங்கள்


மே 03,2014. இத்தாலியில் பணியாற்றும் Catholic Action என்ற குழுவின் தேசிய அவை அங்கத்தினர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய பங்குதளங்கள் புத்துணர்ச்சியுடனும், புதிய சிந்தனைகளுடனும் சேவையாற்றவேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
சரியான பாதையில் இன்றைய சமூகத்தை எடுத்துச் செல்லும் நோக்கில் மாற்றங்களைக் கொணரவேண்டிய தேவையை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ், இந்த கத்தோலிக்க நடவடிக்கை அமைப்பு, குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினரை அங்கத்தினர்களாகக் கொண்டு இத்தாலி முழுவதும் செம்மையுடன் செயலாற்றி வருவது குறித்து மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.
இயேசுவோடு நிலைத்திருங்கள், அவரிடமிருந்து நம்பிக்கையைப் பெற்று தெருக்களுக்குச் சென்று பகிருங்கள், இறுதியாக இயேசுவில் இணைந்து மகிழ்ச்சியைக் கொண்டாடுங்கள் என்ற மூன்று கருத்துக்களை அக்குழுவின் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ், தோற்றத்தையும் தாண்டி மக்களின் அவலங்களைக் காணவல்ல கண்களையும், மக்களின் அழுகுரலைச் செவிமடுக்கவல்ல காதுகளையும், உதவி குணப்படுத்தும் கைகளையும், அனைவருக்கும் நல்லதையே விரும்பும் இதயத்தையும் நமக்கென இறைவனிடம் வேண்டுவோம் என அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.