பாப்பிறைக் கழகத்தின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கு திருத்தந்தை பாராட்டு
மே02,2014. தன் பிறரன்பு நடவடிக்கைகள் மூலம் வளரும் நாடுகளுக்கு எண்ணற்ற உதவிகளை ஆற்றிவரும்
பாப்பிறைக் கழகத்தின் அங்கத்தினர்களுக்கு இவ்வெள்ளிக்கிழமையன்று தன் நன்றியை வெளியிட்டார்
திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் இதயத்திற்கு வெகு அருகாமையில் இருக்கும்
பிறரன்பு நடவடிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட பாப்பிறை
பிறரன்புக் கழகம், பல்வேறு கல்வி நடவடிக்கைகளுக்கும் பிறரன்பு நடவடிக்கைகளுக்கும் தொடர்ந்து
ஆற்றிவரும் பணிகள் குறித்து தன் பாராட்டுகளை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். உரோம்
நகரில் மேல்படிப்பை மேற்கொள்ள வரும் குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினருக்கு
இந்த பாப்பிறைக் கழகம் ஆற்றிவரும் உதவிகளை குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், இதன்மூலம்
வருங்காலத் தலைமுறைத் தலைவர்களை உருவாக்கவும், அவர்கள்வழி திருச்சபையின் சமூகப் படிப்பினைகளுக்கு
உயிர்கொடுக்கவும் உதவி வருவதைப் பாராட்டினார்.