நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்களின் பூமிமட்டம்
வேகமாக உள்ளிறங்குவதாக எச்சரிக்கை
ஏப்.30,2014. நிலத்தடி நீர் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின்
பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக நிலவியல் அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுச்சூழலில்
ஏற்பட்டுவரும் கடுமையான பாதிப்புக்கள் காரணமாக புவியானது வேகமாக வெப்பமடைந்து வருபவதன்
விளைவாக கடலின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துவருவதால் சென்னை, கொழும்பு போன்ற கடலோர
நகரங்களின் கடற்கரையோர பகுதிகள் படிப்படியாக கடலில் மூழ்கும் ஆபத்து அதிகரிக்கும் என்று
அறிவியலாளர்கள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இது போன்ற பெரு நகரங்களில்
நிலத்தடி நீரை வேக வேகமாக உறிஞ்சி எடுப்பதால் இந்த நகரங்களின் நிலமே கூட படிப்படியாக
உள்ளிறங்கி வருவதாக விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்து எச்சரித்துள்ளனர். சில கடலோர நகரங்களில்
கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும் வேகத்தைவிட, நிலப்பகுதியானது பத்து மடங்கு அதிக வேகமாக
உள்ளிறங்கிக்கொண்டிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலவியல் அறிவியல் ஒன்றிய அவையின்
கூட்டத்தில் பேசிய விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.