ஆப்பிரிக்க நாடுகள் தங்களுக்குள்ளேயேத் தீர்வு காண ஆயர்கள் வேண்டுகோள்
ஏப்.30,2014. ஆயுத மோதல்களாலும், பொருளாதார வீழ்ச்சிகளாலும் துன்பங்களை அனுபவிக்கும்
ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள், வெளிநாடுகளின் தலையீடுவரை காத்திருக்காமல், பிரச்சனைக்குத்
தீர்வு காண உடனடியாக முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் ஆப்பிரிக்காவின் தென்மண்டல
ஆயர்கள். வெளிநாட்டுச் சக்திகள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும்வரை காத்திருப்பது
ஆப்பிரிக்காவுக்கு தலைகுனிவைக் கொணரும் என உரைக்கும் ஆயர்கள், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு,
நைஜீரியா, தென்சூடான் போன்ற நாடுகள் பிரச்சனைகள் வெடிக்கும்வரை கத்திருந்ததை குறித்துக்
குற்றஞ்சாட்டியுள்ளனர். மனிதவாழ்வை பாதுகாப்பதே ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாக இருக்கவேண்டும்
என்பதை தங்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ள ஆப்ரிக்க தென்மண்டல ஆயர்கள், சண்டைகளாலும்,
பொருளாதாரக் காரணங்களுக்காகவும் மக்கள் நாடுவிட்டு நாடு குடிபெயர்வது பலநாடுகளின்டையே
தீர்வுக்காணப்படவேண்டிய பிரச்சனை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.