பாகிஸ்தானில் பாலியல் வன்முறைகள் களையப்பட செப வழிபாடு
ஏப். 29,2014. பாலியல் வன்முறைகளுக்கு சிறார்கள் உள்ளாக்கப்படுவதை குறித்த விழிப்புணர்வை
உருவாக்கும் விதமாக பாகிஸ்தானில் அனைத்துக் கோவில்களிலும் மெழுகுதிரி தாங்கிய செபவழிபாடுகளும்
ஊர்வலமும் இடம்பெற்றன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் அரசின் மௌனத்தாலும், காவல்துறையின்
நடவடிக்கையின்மையாலும் சிறுமிகள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்வதாக
அப்பகுதியின் மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. கடந்த சில நாட்களில் பஞ்சாப்
மாநிலத்தில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு
புள்ளிவிவரங்களின்படி, பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளாக 2133 புகார்கள் பதிவாகியுள்ளன.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுள் 10 விழுக்காடே வெளியே தெரிய வருவதால், உண்மையான எண்ணிக்கை
மிகப்பெரியதாக இருக்கும் என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.