ஏப்ரல் 26, 2014. புனிதரும் மனிதரே. - அலக்சாந்திரிய திருஅவையை நிறுவிய நற்செய்தியாளர்
நற்செய்தியாளரான புனித மாற்கு, இயேசுவின் எழுபது சீடர்களுள் ஒருவராகவும். கிறிஸ்தவத்தின்
மிகவும் பழைமையான நான்கு ஆயர்பீடங்களுள் ஒன்றான அலெக்சாந்திரியா திருஅவையின் நிறுவனராகவும்
கருதப்படுகின்றார். நீரோ மன்னன் ஆண்ட காலத்தில் அலெக்சாந்திரியாவின் ஆயரானார் மாற்கு,
என்கிறார் வரலாற்றாசிரியரான யுசிபசின். பாரம்பரியக்கூற்றுப்படி, கி.பி 68ம் ஆண்டு இவர்
மறைசாட்சியாக இறந்தார். மாற்கு நற்செய்தி 14:51-52ல் கெத்சமனித் தோட்டத்தில் இயேசு
கைதுசெய்யப்பட்டப்பின்பு அவர் பின்னே சென்ற இளைஞர் இவர் என்றும், இயேசுவைக் கைது செய்தவர்கள்
இவரைப் பிடித்தபோது தம் வெற்று உடம்பின் மீது இருந்த நார்ப்பட்டுத் துணியை விட்டு விட்டு
இவர் ஆடையின்றித் தப்பி ஓடினார் என்றும் நம்பப்படுகிறது. புனிதர்கள் பவுல் மற்றும்
பர்னபாசின் நற்செய்தி அறிவிப்புப் பயணத்தின் போது இணைந்து பணியாற்றிய புனித மாற்கு, புனிதர்கள்
பேதுரு மற்றும் பவுலோடு உரோம் நகருக்கு வந்தார். இயேசுவோடு உடனிருந்த புனித பேதுருவின்
வார்த்தைகளை நேரடியாகக் கேட்டு நற்செய்தி நூலை எழுதினார் இப்புனிதர். புனித மாற்குவின்
தாய் தன் எருசலேம் வீட்டை ஆதி கால கிறிஸ்தவர்களின் பயன்பாட்டிற்கென வழங்கியவர். இறைத்தூண்டுதலால்
புனித மாற்கு எழுதிய நற்செய்தி, பிற இனமக்கள் கிறிஸ்துவை அறிந்து கொள்ள தொகுத்து எழுதப்பட்டது
என்பது உண்மை. ‘காலம் நிறைவேறி விட்டது. கடவுள் அரசு நெருங்கி விட்டது. மனம் திரும்பி
நற்செய்தியை நம்புங்கள்,’ என்பது இதில் மையச் செய்தியாகியுள்ளது. நற்செய்தியாளரும்,
புனித பேதுருவின் நெருங்கிய உதவியாளரும், அலெக்சாந்திரிய திருஅவையை நிறுவியவரும், அதன்
முதல் ஆயருமான புனித மாற்குவின் விழா ஏப்ரல் 25ம் தேதி கொண்டாடப்படுகின்றது.