2014-04-24 16:33:01

திருத்தந்தையர் 23ம் ஜான், மற்றும் 2ம் ஜான்பால் ஆகிய இருவரின் தபால் தலைகளை பிலிப்பின்ஸ் அரசு வெளியிடவுள்ளது


ஏப்.24,2014. ஏப்ரல் 27, வருகிற ஞாயிறன்று புனிதர்களாக உயர்த்தப்படும் திருத்தந்தை 23ம் ஜான், மற்றும் திருத்தந்தை 2ம் ஜான்பால் ஆகிய இருவரின் உருவங்கள் பதித்தத் தபால் தலைகளை பிலிப்பின்ஸ் அரசு வெளியிடவுள்ளது.
புனித பேதுரு பசிலிக்காப் பேராலயம், மற்றும் இவ்விரு திருத்தந்தையர் பயன்படுத்திய இலச்சினைகள் ஆகியவை பின்னணியிலும், திருத்தந்தையரின் முகங்கள் நடுவிலும் பதிக்கப்பட்ட தபால் தலைகளை, பிலிப்பின்ஸ் அரசு இஞ்ஞாயிறன்று வெளியிடுகிறது.
இவ்விரு திருத்தந்தையரும் பிலிப்பின்ஸ் மக்களைப் பெரிதும் கவர்ந்தவர்கள் என்பதால், இத்தபால் தலைகளை வெளியிடுவதில் பிலிப்பின்ஸ் அரசு பெரிதும் பெருமைப்படுகின்றது என்று, பிலிப்பின்ஸ் தபால்துறை இயக்குனர், Josie Dela Cruz அவர்கள், UCAN செய்தியிடம் கூறினார்.
4.50 டாலர்கள் மதிப்புள்ள இத்தபால்தலைகளில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில், முப்பரிமாணம் கொண்ட வடிவத்திலும் தபால் தலைகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.