புனிதர் பட்டமளிப்பு விழாவிற்கு முன்னர் இளையோரின் இரவு கண்விழிப்பு செபம்
ஏப்.22,2014. திருத்தந்தையர்கள் 23ம் ஜான் மற்றும் இரண்டாம் ஜான்பால் ஆகியோரின் புனிதர்
பட்டமளிப்பு விழாவிற்கு முந்தைய நாள் இரவு கண்விழிப்புச் செபத்தில் கலந்துகொள்ள இத்தாலி
மற்றும் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த இளையோர் திட்டமிட்டுள்ளனர். இரண்டாம் வத்திக்கான்
சங்கம் வழியாகவும் இளையோருடன் மேற்கொண்ட சிறப்புச் சந்திப்புகள் வழியாகவும் இவ்விரு திருத்தந்தையர்களும்
ஆற்றியுள்ள சேவைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த இரவு கண்விழிப்பு திருவழிபாட்டில்
கலந்துகொள்வதாக உலகக் கத்தோலிக்க இளையோர் நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. உரோமை
மறைமாவட்டத்தின் சிறப்புப் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்செப வழிபாடு, சனிக்கிழமை
உரோம் நகரில் இரவு 10.30 மணிக்குத் துவங்கி அடுத்த நாளான புனிதர் பட்டமளிப்பு ஞாயிறன்று
காலை 5 மணிக்கு நிறைவுக்கு வரும். புதிதாக புனிதர்களாக அறிவிக்கப்படவுள்ள இரு திருத்தந்தையர்களுக்காக
இறைவனுக்கு நன்றிசொல்ல இந்த நாளை பயன்படுத்துவதுடன், உலகின் பலப் பகுதிகளைச் சேர்ந்த
இளைஞர்களுடன் பழகி தெரிந்து கொள்ளவும் இது நல்லதொரு வாய்ப்பாக அமையும் என உலக கத்தோலிக்க
இளையோர் அமைப்பு தெரிவித்துள்ளது.