தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடச் சென்ற கத்தோலிக்கத் தலைவர்களுக்கு அனுமதி மறுப்பு!
ஏப்.21,2014. அனுராதபுரம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை,
முன் அனுமதியுடன், உயிர்ப்புப் பெருவிழாவன்றுப் பார்வையிடச் சென்ற மன்னார் மற்றும் அனுராதபுரம்
மறை மாவட்ட உயர் அதிகாரிகள், கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர். உயிர்ப்புப்
பெருவிழாவை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு உதவிப் பொருட்களை
வழங்கும் நோக்குடன் இவ்விரு மறை மாவட்ட உயர் அதிகாரிகளும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
அமைச்சகத்திடம் அனுமதி பெற்றிருந்தும், சிறைச்சாலைக்குச் செல்வதற்குத் தயாரான வேளையில்
அனுமதி மறுப்பு குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்பொன்றின் மூலமே
அனுமதி மறுக்கப்பட்டுள்ள விவரம் தங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது என்றும், பாதுகாப்பு
அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவரின் கட்டளையின் பேரிலேயே தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளோம்
என்றும் இவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உண்மையானதொரு நல்லிணக்கத்தை நோக்கி நாடு
பயணிக்கும் வேளையில், இத்தகைய நிகழ்வுகள் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள்
கவலையை வெளியிட்டனர்.