2014-04-19 13:46:11

புற்றுநோயால் வாடும் குழந்தைகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள 'Easter Egg' பரிசுகள்


ஏப்.19,2014. "கொரியாவில் நிகழ்ந்துள்ள உல்லாசக் கப்பல் விபத்தில் இறந்த அனைவருக்காகவும், அவர்கள் குடும்பத்தினருக்காகவும் என்னோடு இணைந்து தயவுசெய்து செபியுங்கள்" என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 16, இப்புதனன்று, தென்கொரிய உல்லாசக் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 475 பேரில், 287 பேரின் நிலை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் பள்ளியில் பயின்றுவரும் மாணவ, மாணவியர்.
மேலும், உரோம் நகரில், 'Bambino Gesu' என்றழைக்கப்படும் குழந்தை இயேசு குழந்தைகள் மருத்துவமனையில் புற்றுநோயால் வாடும் குழந்தைகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'Easter Egg' என்று சொல்லப்படும் 'உயிர்ப்பு முட்டை'களை, பரிசாக அனுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தை இயேசு மருத்துவமனைக்குச் சென்று, குழந்தைகளுக்கு தன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை நேரடியாகத் தெரிவித்தார்.
உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி, அங்கு புற்றுநோயால் வாடும் 150 குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் அடங்கிய சாக்கலேட்டால் செய்யப்பட்ட 'உயிர்ப்பு முட்டை'களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் பரிசாக அனுப்பியுள்ளார்.
1924ம் ஆண்டு, குழந்தைகளுக்கென்று உருவாக்கப்பட்ட 'Bambino Gesu' எனப்படும் இச்சிறப்பு மருத்துவமனை, திருத்தந்தையர் பலரின் தொடர்ந்த ஆதரவைப் பெற்று வருவதால், 'திருத்தந்தையின் மருத்துவமனை' என்றும் அழைக்கப்படுகிறது.
1958ம் ஆண்டு, திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், இம்மருத்துவமனைக்கு நேரில் சென்று, குழந்தைகளைச் சந்தித்த நிகழ்ச்சிக்குப் பின், அவரைத் தொடர்ந்த அனைத்து திருத்தந்தையரும் 'Bambino Gesu' மருத்துவமனைக்குச் சென்று குழந்தைகளை அவ்வப்போது சந்தித்து வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.