உரோம் நகர் சிலுவைப்பாதை பக்தி முயற்சியில், சிலுவையை ஏந்திச் சென்றோரைக்
குறித்த விவரங்கள்
ஏப்.19,2014. ஏப்ரல் 18, புனித வெள்ளியன்று உரோம் நகர் Colosseum திறந்த வெளியரங்கில்,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில், பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்ட சிலுவைப்பாதை
பக்தி முயற்சியில், ஒவ்வொரு நிலையிலும் சிலுவையை ஏந்திச் சென்றோரைக் குறித்த விவரங்களை
திருப்பீடம் இச்சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. உரோம் மறைமாவட்டத்தின் பல பங்குத் தளங்களிலிருந்து
தெரிவு செய்யப்பட குழந்தைகள், இளையோர், குடும்பத்தினர், வயது முதிர்ந்தோர் என்ற பல நிலைகளையும்
சார்ந்த பிரதிநிதிகள் சிலுவையைச் சுமந்து சென்றனர். அதேபோல், சிறைக் கைதிகளில் இருவர்,
வீடற்றோர் இருவர், சக்கர நாற்காலியில் இருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் ஆகியோரும் சிலுவை
சுமந்து சென்றனர். திருத்தந்தையின் சார்பில் உரோம் ஆயராக பணியாற்றும் கர்தினால் அகோஸ்தினோ
வல்லினி அவர்கள், புனித பூமியில் பணியாற்றும் பிரான்சிஸ்கன் துறவிகளில் இருவர், அருள்
சகோதரிகள் இருவர் ஆகியோரும் சிலுவையைச் சுமந்து சென்றனர். உரோமைய அரசு கிறிஸ்தவர்களை
வேட்டையாடிய Colosseum என்ற திறந்த வெளியரங்கில், பாரம்பரியச் சிலுவைப்பாதை பக்தி முயற்சியை,
திருத்தந்தையர் பலர் முன்னின்று நடத்தி வந்துள்ளனர். பாரம்பரியச் சிலுவைப்பாதையைச்
சிறிதளவு மாற்றி, விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட சிலுவைப்பாதையை, 1991ம்
ஆண்டு திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் முதன்முறையாக துவக்கிவைத்தார். இதைத் தொடர்ந்து,
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களும் விவிலிய அடிப்படையில் நடத்தப்படும் இந்த பக்தி முயற்சியைத் தொடர்கின்றனர்.