ஏப்.19,2014. 'இவ்வுலகம் பல்வேறு பொய் தெய்வங்களை வழிபட்டு வருகிறது. அந்தப் பொய் தெய்வங்களிலெல்லாம்
தலையானது, பணம்' என்று திருத்தந்தையர் இல்ல மறையுரையாளரான அருள்பணி Raniero Cantalamessa
அவர்கள் கூறினார். புனித வெள்ளியன்று மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப்
பேராலயத்தில் இடம்பெற்ற திருப்பாடுகள் மற்றும் திருச்சிலுவை வழிபாட்டில், அருள்பணி Cantalamessa
அவர்கள், பணத்தாசை இவ்வுலகில் விளைவிக்கும் தீமைகளை மையப்படுத்தி மறையுரை வழங்கினார். இயேசுவின்
சீடர்களில் ஒருவராக தன் வாழ்வைத் துவக்கிய யூதாசு, இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் துரோகியாக
மாறும் அளவுக்கு அவரை மாற்றியது பணத்தாசை என்பதை அருள்பணி Cantalamessa அவர்கள் வலியுறுத்திக்
கூறினார். யூதாசிடம் பணப்பை இருந்ததென்றும் (யோவான் 13: 29), அவர் பொதுப் பணத்தை எடுத்துச்
செலவழித்தார் என்றும் வாசிக்கும்போது, பொதுமக்கள் பணத்தைக் கண்காணிப்போருக்குச் செய்திகள்
சொல்லப்படுகின்றனவா என்ற கேள்வியை அருள்பணி Cantalamessa அவர்கள் எழுப்பினார். அண்மைய
ஆண்டுகளில், உலக நாடுகள் அனுபவித்த, குறிப்பாக, இத்தாலி நாடு இன்னும் அனுபவித்துவரும்
பொருளாதாரச் சரிவு ஒரு சிலரின் தீராதப் பணத்தாசையால் விளைந்தது என்பதையும் அருள்பணி Cantalamessa
அவர்கள் சுட்டிக்காட்டினார். மனிதர்களை, குறிப்பாக, இளையோரை, போதைப் பொருள்களுக்கு
அடிமையாக்குதல், அழிவுக் கருவிகளை உருவாக்குதல் மற்றும் விற்பனை செய்தல், குழந்தைகளைக்
கடத்திச் சென்று அவர்கள் உள் உறுப்புக்களை அகற்றி விற்பனை செய்தல் போன்ற கொடுமைகள் இவ்வுலகில்
தாண்டவமாடுவதற்கு ஆணிவேராக விளங்குவது பணத்தாசையே என்று அருள்பணி Cantalamessa அவர்கள்
வருத்தத்துடன் குறிப்பிட்டார். அளவுக்கதிகமாக மாத ஊதியமும், ஓய்வூதியமும் பெறுவோரைக்
குறிப்பிட்டுப் பேசிய அருள்பணி Cantalamessa அவர்கள், எளிய மக்களைக் காட்டிலும் 100 மடங்கு
அதிகமாக திரட்டியச் செல்வத்தால் சுகம்காண நினைத்த இவர்களில் பலர், சிறைகளுக்குச் செல்லவேண்டியச்
சூழலையும் சுட்டிக்காட்டினார். தவறுகள் செய்வது அனைத்து மனிதர்களின் பலமற்ற நிலை என்றாலும்,
அந்நிலையிலிருந்து மீண்டும் இறைவனிடம் வருவதற்கு, புனித பேதுருவைப் போல முயலவேண்டுமே
தவிர, தீமையிலேயே தங்கி வாழ்வை முடித்துக் கொண்ட யூதாசைப் போல இருப்பது தவறு என்பதையும்
தன் மறையுரையின் இறுதியில், திருத்தந்தையர் இல்ல மறையுரையாளரான அருள்பணி Cantalamessa
அவர்கள் எடுத்துரைத்தார்.