அனாதையாக விடப்பட்ட ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க முன்வந்துள்ள இத்தாலிய கால்பந்தாட்ட
வீரர்
ஏப்.10,2014. கால்பந்தாட்டத்தை வர்த்தக ரீதியாக விளையாடி வரும் ஓர் இத்தாலிய கால்பந்தாட்ட
வீரர், இரயிலில் அனாதையாக விடப்பட்ட ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க முன்வந்துள்ளார். இத்தாலியின்
ஒரு உள்நாட்டு இரயில்தொடர் பெட்டியில், பிறந்து 3 அல்லது 4 நாட்களே ஆன ஓர் ஆண் குழந்தை,
ஓர் இருக்கையின் அடியில், சில நாட்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது. இக்குழந்தையைக்
குறித்து ஊடகங்கள் வழியே கேள்விப்பட்ட, இத்தாலிய கால்பந்தாட்ட வீரர் Antonio Floro Flores
அவர்கள், இக்குழந்தையைத் தான் தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாகக் கூறியுள்ளார். திருமணமாகி,
மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான Floro Flores அவர்கள், தான் ஒரு குடும்பத்தின் தந்தை
என்பதே தன் முதல் கடமை என்றும், தன் கால்பந்தாட்டம் அடுத்த கடமையே என்றும் கூறியுள்ளார்.
இரயில் காவலர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்ட இக்குழந்தைக்கு, திருத்தந்தை பிரான்சிஸ்
நினைவாக, 'பிரான்சிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.