அக்காலத்தில் இயேசு யூதர்களிடம், ' என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள்
என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார். யூதர்கள் அவரிடம், ' நீ பேய் பிடித்தவன்தான்
என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள்.
ஆனால் என் வார்த்தையைக் கடைப் பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே! எங்கள் தந்தை
ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக்
கொண்டிருக்கிறாய்? ' என்றார்கள். இயேசு மறுமொழியாக, ' நானே என்னைப் பெருமைப்படுத்தினால்,
அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள்
உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள். ஆனால் அவரை உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும்.
எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத்
தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைபிடிக்கிறேன். உங்கள் தந்தை ஆபிரகாம் நான்
வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது
மகிழ்ச்சியும் கொண்டார் ' என்றார். யூதர்கள் அவரை நோக்கி, ' உனக்கு இன்னும் ஐம்பது வயது
கூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா? ' என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம்,
' ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்
' என்றார். இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக
நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.