பிரேசில் நாட்டில் இடம்பெற்ற உலக இளையோர் நாளை ஏற்பாடு செய்தோருடன் திருத்தந்தை சந்திப்பு
ஏப்.07,2014. கடந்த ஆண்டு ஜூலை மாத இறுதிவாரத்தில் பிரேசில் நாட்டில் இடம்பெற்ற 28வது
உலக இளையோர் நாள் ஏற்பாடுகளில் ஈடுபட்டோரை இத்திங்களன்று காலைத் திருப்பீடத்தில் சந்தித்து
உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். இம்மாபெரும் கொண்டாட்டத்திற்கு தங்கள் சிறப்புப்
பங்களிப்பை வழங்கிய பொதுநிலையினர், அருள் பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் ஆயர்களை நன்றியுடன்
நினைவுகூர்வதாகக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நம் முயற்சிகளை எப்போதும்
இரட்டிப்பாக்குகிறார் என்ற உண்மையை இளையோர் நாள் கொண்டாட்டங்களின்போது காணமுடிந்தது என்று
கூறினார். அண்மையில் புனிதரென அறிவிக்கப்பட்ட பிரேசில் நாட்டின் Jose de Anchieta
அவர்களின் எடுத்துக்காட்டையும் முன்வைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின்
மகிமைக்காகவும் ஆன்மாக்களின் மீட்ப்புக்காகவும் உழைப்பவர்களுக்கு இயலாதது என்று எதுவுமில்லை
என்ற புனித Anchietaவின் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டினார்.