2014-04-04 15:59:43

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புனித வாரத் திருவழிபாடு நிகழ்ச்சிகள்


ஏப்.04,2014. இம்மாதம் 13ம் தேதி குருத்தோலை ஞாயிறு முதல் 20ம் தேதி உயிர்ப்பு ஞாயிறுவரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருவழிபாடு நிகழ்ச்சிகள் குறித்த விபரங்களைத் திருத்தந்தையின் திருவழிபாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
13ம் தேதி குருத்தோலை ஞாயிறன்று, உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குருத்தோலைப் பவனியை நடத்தி, திருப்பலியும் நிகழ்த்துவார் திருத்தந்தை.
குருத்தோலை ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவையில் 29வது உலக இளையோர் தினம் சிறப்பிக்கப்படுகின்றது. ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியதே என்பது இத்தினத்தின் தலைப்பாகும்.
17ம் தேதி புனித வியாழன் உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் புனித எண்ணெய் மந்திரிக்கும் திருப்பலியையும், 18ம் தேதி புனித வெள்ளி உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு திருச்சிலுவை திருவழிபாட்டையும், இரவு 9.15 மணிக்கு கொலோசேயத்தில் சிலுவைப்பாதை பக்தி முயற்சியையும் நிகழ்த்துவார் திருத்தந்தை.
19ம் தேதி உள்ளூர் நேரம் இரவு 8.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் பாஸ்கா திருவிழிப்பு திருவழிபாட்டையும், 20ம் தேதி காலை 10.15 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியையும், பகல் 12 மணிக்கு ஊர்பி எத் ஓர்பி செய்தியையும் வழங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.