2014-04-01 16:20:00

தட்பவெப்பநிலை மாற்றம் ஆசியாவில் போருக்கு இட்டுச்செல்லும், ஐ.நா.


ஏப்.01,2014. நீர் ஆதாரங்கள், உணவு உற்பத்தி உள்ளிட்டவைகள் குறைந்து வருவதால் அது வருங்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா உள்ளிட்ட நாடுகளிடையே போர் மூளும் நிலை ஏற்பட்டு வருவதாக ஐநா வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
காலநிலைகள் மாறி வருவதால் மனிதர்களின் நலவாழ்வு, இயற்கை வளங்கள் ஆகியவை பெரும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ள மீன்களும் நீரின் வெப்பம் தாளாமல் வேறு இடங்களுக்கு இடம்பெயரக்கூடும் எனவும், குறிப்பாக, வெப்பமண்டலப் பகுதிகள் பலவற்றிலும் அன்டார்ட்டிகா பகுதியிலும் மீன்வளம் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துவிடும் என்றும் அறிவியலாளர்கள் கணித்துள்ளனர்.
நிலத்தில் விலங்குகள், தாவரங்கள் மற்றும் மற்ற உயிரினங்கள் மேட்டு நிலங்களை நோக்கி நகரலாம். மேலும் அவை துருவங்களை நோக்கி இடம்பெயரக்கூடும். ஒட்டுமொத்தத்தில் இந்த நூற்றாண்டு மாறும்போது மனித குலமும் கடுமையான பருவநிலை பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : TNN








All the contents on this site are copyrighted ©.