யாங்கூன் பேராயர் : ஒப்புரவு, ஒறுத்தல், ஒருவருக்கொருவர் அன்பு ஆகியவையே தவக்காலச்சிறப்பு
மார்ச்,31,2014. தினசரி திருப்பலிகளில் கலந்துகொள்ளல், வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப்பாதை
வழிபாடு, உண்ணா நோன்பு, பங்குதள நடவடிக்கைகளில் பங்கேற்றல் என தவக்கால சிறப்பு நடவடிக்கைகளுக்கு
விடப்பட்ட அழைப்பை யாங்கூன் மக்கள் ஏற்று செயல்படுத்திவருவதாக அறிவித்தார் மியான்மாரின்
பேராயர் ஒருவர். உயிர்ப்புப் பெருவிழாவுக்குத் தயாரிப்பாக யாங்கூன் பெருமறைமாவட்டத்தின்
ஏழைகளுடனும் குழந்தைகளுடனும் ஒருமைப்பாட்டை அறிவித்து, அவர்களின் மேம்பாட்டிற்காக திட்டங்களை
செயல்படுத்திவருவதாக அறிவித்தார் யாங்கூன் பேராயர் சார்ல்ஸ் போ. ஒப்புரவு அருட்சாதனத்தைப்
பெறுவதிலும் ஒறுத்தல் முயற்சிகளைக் கடைப்பிடிப்பதிலும் மட்டுமல்ல, இத்தவக்காலத்தின் 40
நாட்களும் ஒருவேளை உணவை மட்டுமே உண்டு, செலவைக் குறைத்து அதனை ஏழைகளுக்கு வழங்கும் பழக்கமும்
பெரிய அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகக் கூறினார் பேராயர் போ.