வத்திக்கான் பசிலிக்காவில் மற்ற விசுவாசிகளுடன் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும்
ஒப்புரவு அருளடையாளத்தில் கலந்து கொண்டார்
மார்ச்,29,2014. வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் மற்ற விசுவாசிகளுக்கு
ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் முதலில் தானே அவ்வருளடையாளத்தைப் பெற்றார்
திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வெள்ளி மாலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்திய, “ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்” என்ற
மன்னிப்பு விழா திருவழிபாட்டில், ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்குக் காத்திருந்த
மற்ற விசுவாசிகளுடன் இணைந்து தானும் ஒருவராக அவ்வருளடையாளத்தைப் பெற்றார் திருத்தந்தை. திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுவதற்காகக் குறிக்கப்பட்டிருந்த
இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் முதலில் அங்குச் செல்லாமல், அதற்கு அருகில்
அவ்வருளடையாளத்தை நிறைவேற்றுவதற்காக அமர்ந்திருந்த ஓர் அருள்பணியாளரிடம் சென்று அவ்வருளடையாளத்தைப்
பெற்றார். பின்னர் தனது இருக்கைக்குச் சென்று மற்ற விசுவாசிகளுக்கு அவ்வருளடையாளத்தை
நிறைவேற்றினார். இவ்வெள்ளி மாலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில்
ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றிய 61 அருள்பணியாளர்களுள் தானும் ஒருவராக இருந்து ஏறக்குறைய
40 நிமிடங்கள் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.