2014-03-28 16:35:56

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்களின் கடவுள், காணாமல்போன தம் மகனுக்காக எப்போதும் காத்திருக்கும் ஒரு தந்தை போன்றவர்


மார்ச்,28,2014. கடவுள் எப்போதும் மன்னிப்பவர், ஒவ்வொரு மனிதரும் தம்மிடம் திரும்பி வரும்போது அதனை அவர் கொண்டாடுகிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
இவ்வெள்ளி காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில், இறைவாக்கினர் ஓசேயா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்நாளைய முதல் வாசகத்தை மையமாக வைத்து ஆற்றிய மறையுரையில் கடவுளின் கருணை பற்றிப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளுக்கு மன்னிப்பதைத் தவிர வேறு என்ன செய்வது எனத் தெரியாது என்றும், அவர் மன்னிக்கும் கடவுள், இரக்கத்தின் கடவுள், மன்னிப்பதில் சோர்வடையாத கடவுள், நம் அனைவருக்காகவும் அவர் எப்போதும் காத்திருக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
நம்மை மனம் மாறுவதற்கு அவர் அழைக்கும்போதுகூட அவரது கனிவு தெரிகின்றது என்றும், கிறிஸ்தவர்களாகிய நமக்கு அவர் எப்போதும் காத்திருக்கும் ஒரு தந்தையாக உள்ளார் என்றும் உரைத்த திருத்தந்தை, காணாமல்போன மகன் உவமை பற்றியும் இம்மறையுரையில் குறிப்பிட்டார்.
நான் நிறையப் பாவங்கள் செய்துள்ளேன், எனவே கடவுள் மகிழ்வாரா எனத் தெரியாது என்று யாரும் சொன்னால், அவரிடம் சென்று முயற்சி செய்யலாம், ஏனெனில் அவர் அன்புடன் எப்போதும் நம்மை வரவேற்கிறார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
காணாமல்போன மகனின் தந்தை, அம்மகனை பெரிய விருந்து வைத்து வரவேற்றது போல, கடவுள் தம் அன்பில் எப்பொழுதும் வெற்றியடைகிறார், அவரை அணுகிச் செல்ல துணிச்சல் கொண்டவர்கள் அவரது கொண்டாட்ட்டத்தில் மகிழ்வைக் கண்டடையலாம் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.