திருத்தந்தை பிரான்சிஸ் - கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து,
மரியன்னை முன்னிலையில் தங்கள் பக்தியை வெளிப்படுத்தியிருப்பது மகிழ்வைத் தருகிறது
மார்ச்,27,2014. கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து, மரியன்னை முன்னிலையில் தங்கள்
பக்தியை வெளிப்படுத்தியிருப்பது மகிழ்வைத் தருகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
கூறினார். மார்ச் 25, கடந்த செவ்வாயன்று கொண்டாடப்பட்ட கிறிஸ்துபிறப்பு அறிவிப்புத்
திருநாளன்று, லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில், புனித யோசேப்பு பல்கலைக் கழகத்தின் முன்னாள்
மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இணைந்து வந்தனர். கடந்த
எட்டு ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்றுவரும் இந்த ஆண்டு விழாவிற்கு திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், ஒரு தந்தியின் மூலம் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். Harissa என்ற இடத்தில்
அமைந்துள்ள லெபனான் நாட்டின் அன்னைமரியா திருத்தலம் அருள் மிகுந்த ஓர் இடம் என்பதையும்,
அங்கு கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் இணைந்து அமைதிக்காகச் செபிக்க வேண்டும் என்றும் திருத்தந்தை
அழைப்பு விடுத்தார். அன்னை மரியாவின் பாதுகாவலில் அனைத்து லெபனான் மக்களையும் ஒப்படைத்து
செபிப்பதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்த்துத் தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.