ஹையான் சூறாவளியில் பாதிக்கப்பட்டப் பகுதிகளைப் பார்வையிடச் சென்றுள்ள ஆயர் ஜோசப்
களத்திப்பரம்பில்
மார்ச்,26,2014. ஹையான் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மீன்பிடித் தொழிலாளர்களுக்கு உதவுவதும்,
அவர்கள் இயற்கை சார்ந்த வழிகளில் தங்கள் தொழிலைத் தொடர்வதற்கு உதவுவதும் திருப்பீடத்தின்
நோக்கம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். கடந்த ஆண்டு நவம்பர் 7ம்
தேதி, பிலிப்பின்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியை பெரும் வலிமையோடு தாக்கிய ஹையான் சூறாவளியில்
பாதிக்கப்பட்டப் பகுதிகளைப் பார்வையிடச் சென்றுள்ள, புலம்பெர்யர்ந்தோர் மற்றும் பயணிகள்
திருப்பீட அவையின் செயலர், ஆயர் ஜோசப் களத்திப்பரம்பில் அவர்கள், செய்தியாளர்களிடம் பேசுகையில்
இவ்வாறு கூறினார். ஆயர் களத்திப்பரம்பில் அவர்களின் பயணத்தில், மணிலா பேராயர் கர்தினால்
அந்தோனியோ தாக்லே அவர்களையும், மணிலா திருப்பீடத் தூதர் பேராயர் ஜூசப்பே பின்டோ மற்றும்,
மணிலா ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ் ஆகியோரையும் சந்திக்கிறார். திருப்பீடத்தின்
நிதி உதவியுடன் அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்புப் பணிகளையும் ஆயர் களத்திப்பரம்பில்
அவர்கள் பார்வையிடுகிறார்.