உர்பானியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தின் தலைமைத் திருநாளில் கர்தினால் Filoni
மார்ச்,26,2014. அன்னை மரியாவும், இயேசு கிறிஸ்துவும் கூறிய 'ஆம்' என்ற அர்ப்பணத்தைக்
கொண்டாடும் நாள், கிறிஸ்து பிறப்பு அறிவிப்புத் திருநாள் என்று வத்திக்கான் உயர் அதிகாரி
ஒருவர் கூறினார். உரோம் நகரில் அமைந்துள்ள உர்பானியன் பாப்பிறைப் பல்கலைக் கழகம்,
மார்ச் 25ம் தேதி கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு அறிவிப்புத் திருநாளை, தன் தலைமைத்
திருநாளாகக் கொண்டாடுகிறது. இப்பல்கலைக் கழகத்தின் வேந்தரும், மறைபரப்புப் பணி பேராயத்தின்
தலைவருமான கர்தினால் Fernando Filoni அவர்கள், இத்திருநாள் திருப்பலியை தலைமையேற்று நடத்தியபோது
இவ்வாறு கூறினார். 1627ம் ஆண்டு உருவாக்கப்பட்ட உர்பானியன் பாப்பிறைப் பல்கலைக் கழகம்,
அருள்பணி பயிற்சியில் ஈடுபட்டுள்ள 1,500க்கும் அதிகமான மாணவர்களை, தன் வளாகத்தில் கொண்டிருந்தாலும்,
உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் மேலும் 10,000த்திற்கும் அதிகமான மாணவர்கள் இப்பல்கலைக்
கழகத்தின் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் வழியாகப் பயின்று வருகின்றனர். பல்வேறு நாடுகள்,
கலாச்சாரங்கள் மத்தியில் உருவாகும் உரையாடலுக்கு உர்பானியன் பாப்பிறைப் பல்கலைக் கழகம்
ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று இப்பல்கலைக் கழகத்தின் அதிபர், அருள்பணி Alberto
Trevisiol அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.