பல கோடி வாசனைகளை அறியும் திறன் கொண்டது மனித மூக்கு
மார்ச்,25,2014. மனிதர்களால், 10 ஆயிரம் கோடி வாசனைகளை அறிய முடியும் என்பதை அறிவியலாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர். 1920ம் ஆண்டில் 10 ஆயிரம் வாசனைக் கலவைகளை, மனிதர்களால் உணர
முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் தற்போது அமெரிக்காவில் உள்ள, 'ஹாவர்டு
ஹக்ஸ்' மருத்துவ நிறுவனத்தின் ஆய்வாளர், லெஸ்லி வாச்சல், ராக்பெல்லர் பல்கலைக்கழக, ஆய்வுக்கூடத்தின்
மூத்த அறிவியலாளர் ஆண்டிரியாஸ் கெல்லர் உள்ளிட்ட நிபுணர்கள், மனிதர்களின் மோப்ப சக்தி
குறித்த ஆய்வில் ஈடுபட்டு இதனைக் கண்டுபிடித்துள்ளனர். மனிதரின் மூக்கில், 400 மோப்பச்
சக்திக்கான பகுத்தறியும் பகுதிகள் உள்ளன. வெவ்வேறு வகையான, 128 வேறுபட்ட வாசனைகளின் மூலக்கூறுகளைத்
தனித்தனியாக பிரித்தெடுத்து, புதிய கலவை உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுப்பில், புற்கள்,
சிட்ரஸ் மற்றும் ரசாயனங்களின் பல்வேறு மூலக்கூறுகள் சேர்க்கப்பட்டது. இவ்வாறு பிரிக்கப்பட்ட
மூலக்கூறுகளை, 10:20:30 என்ற வீதத்தில் கலந்தபோது, மோசமான மற்றும் வித்தியாசமான வாசனைகள்
கிடைத்தன. ஆய்வுக்கு அழைக்கப்பட்ட நபர்கள் ஒவ்வொருவரிடமும், இரண்டு திரவியங்கள் ஒரே மாதிரியாகவும்,
மற்றொன்று வேறுபட்ட வாசனையுடனும் உள்ள மூன்று வாசனை திரவியங்கள் வழங்கப்பட்டன. இப்பரிசோதனை
மூலம், மனிதர்களால், 10 ஆயிரம் கோடி வாசனைகளை அறிய முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.