திருத்தந்தையின் அறிவிப்பு : மார்ச், 28, 29 ஆகிய தேதிகளில் உலகின் அனைத்துக் கத்தோலிக்கக்
கோவில்களிலும் 24 மணி நேர 'மன்னிப்பு விழா'
மார்ச்,24,2014. இம்மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் உரோம் நகரிலும், உலகம் முழுவதும்
உள்ள அனைத்துக் கத்தோலிக்கக் கோவில்களிலும் 24 மணி நேர 'மன்னிப்பு விழா' சிறப்பிக்கப்படும்
என்று அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது
இதனை அறிவித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 28ம் தேதி வெள்ளியன்று பிற்பகல் துவங்கும்
இக்கொண்டாட்டங்களின் மையமாக செபமும், பாவ அறிக்கையிடுதலும், ஒப்புரவு அருள் சாதனமும்
இருக்கும் என்று கூறினார். மாலையிலும், இரவு முழுவதும் செபிப்பதற்கும், ஒப்புரவு அருள்
சாதனத்தில் பங்கேற்பதற்கும் உரோம் நகரில் உள்ள அனைத்துக் கோவில்களும் திறந்திருக்கும்
என்றும் திருத்தந்தை அறிவித்தார். காணாமற்போன மகனின் தந்தை, மகன் திரும்பிவந்தபோது,
கடந்த நிகழ்வுகளை மறந்து, மன்னித்து, விழா கொண்டாடினார் என்றும், இறைவனின் ஒவ்வொரு சந்திப்பும்
நம் வாழ்வில் மாற்றத்தைக் கொணரும், அவருடன் நாம் கொள்ளும் ஒவ்வொரு சந்திப்பும் நம்மை
மகிழ்வில் நிரப்பும் என்றும் கூறிய திருத்தந்தை, இதற்கு, இயேசு சமாரியப் பெண்ணைச் சந்தித்ததை
எடுத்துக்காட்டாகக் கூறினார்.