திருத்தந்தை தென் சூடானுக்கு அனுப்பியுள்ள செய்தி - 'அமைதியின்றி வளர்ச்சியைப் பெறமுடியாது'
மார்ச்,24,2014. தென் சூடானில் வன்முறைகள் நிறுத்தப்பட்டு, அமைதி ஊக்குவிக்கப்படலும்,
மனிதாபிமான உதவிகள் தொடரப்படலும் அவசியம் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டிற்கு
அனுப்பியுள்ள செய்தியில் வலியுறுத்தியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால்
திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் எழுதியுள்ள இச்செய்தியை, திருப்பீட
நீதி, அமைதி பணிக்குழுவின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் அந்நாட்டிற்கு
எடுத்துச் சென்றார். தென் சூடானின் ஜூபா மறைமாவட்டத்திற்கு, கர்தினால் டர்க்சன் அவர்கள்
கொண்டு சென்ற இச்செய்தியில், 'அமைதியின்றி வளர்ச்சியைப் பெறமுடியாது' என்ற கருத்து அழுத்தமாக
வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்பாவி மக்களின் உயிர்களைப் பலிவாங்குவதுடன், பகைமையையும்,
பிரிவினைகளையும் உருவாக்கும் போர்கள் குறித்து திருஅவை பாராமுகமாய் இருக்க முடியாது என்று
திருத்தந்தையின் பெயரால் அனுப்பப்பட்டுள்ள இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இஞ்ஞாயிறன்று
ஜூபா மறைமாவட்டத்தின் புனித தெரேசா பேராலயத்தில் கர்தினால் டர்க்சன் அவர்களால் இச்செய்தி
வாசிக்கப்பட்டது.