2014-03-22 16:08:46

இயேசுவின் மீட்பளிக்கும் அன்பின் சக்தியினின்று நம்மை எதுவும் பிரிக்க முடியாது, திருத்தந்தை பிரான்சிஸ்


மார்ச்,22,2014. இயேசுவே நம் நம்பிக்கை; தீமை அல்லது மரணம்கூட, எதுவும் நம்மை இயேசுவின் மீட்பளிக்கும் அன்பின் சக்தியினின்று பிரிக்க முடியாது என்று, தனது டுவிட்டர் செய்தியில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இத்தாலிய கத்தோலிக்க வானொலி-தொலைக்காட்சி ஊடகத்துறைகள் அமைப்பான “Corallo”வின் ஏறக்குறைய 400 உறுப்பினர்களை, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தனிமனிதர், குடும்பங்கள், சமூகம் ஆகியவற்றின் வாழ்வில் காணப்படும் முக்கியமான விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்துமாறும், அவ்வாறு செயல்படும்போது பொதுநலன் மற்றும் உண்மைக்கு நேர்மையுடன் பணியாற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஊடகங்களின் ஒளி-ஒலி நிகழ்ச்சிகளில், மனிதரின் வரலாறுகள் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், இவர்கள் தங்கள் பணிகளில் மனித மற்றும் அறநெறிப் பண்புகளை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளை வழங்குமாறும் கூறினார்.
நல்ல சமாரியர் பணிசெய்யும் திருஅவையின் முகங்களாக இந்த ஊடகப் பணியாளர்கள் மாறுமாறும் பரிந்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.