மார்ச்,21,2014. மால்ட்டா அரசுத்தலைவர் George Abela அவர்கள் இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச்
செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர்
பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்தார் மால்ட்டா அரசுத்தலைவர் Abela. மால்ட்டா
மக்களின் வரலாற்றிலும், கலாச்சாரத்திலும், வாழ்விலும் வேரூன்றியுள்ள கிறிஸ்தவத்தின் ஆழமான
சுவடுகள் பற்றியும், திருப்பீடத்துக்கும் மால்ட்டாவுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள்
பற்றியும் இச்சந்திப்புக்களில் நினைவுகூரப்பட்டதாகத் திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
திருத்தந்தையர் 2ம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோர் மால்ட்டாவுக்கு மேற்கொண்ட
திருப்பயணங்கள், மால்ட்டாவில் கல்வி, நலவாழ்வு உட்பட பொதுப்பணித்துறைகளில் கத்தோலிக்கத்
திருஅவையின் பங்கு போன்றவையும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றதாக அப்பத்திரிகை அலுவலகம்
கூறியது. ஐரோப்பிய ஒன்றியத்தில் மால்ட்டாவின் பங்கு, இன்னும், மத்திய கிழக்குப் பகுதியின்
நிலைமை, ஐரோப்பாவுக்கு வரும் குடியேற்றதாரரின் நிலைமை போன்ற தலைப்புகளும் இச்சந்திப்புக்களில்
இடம்பெற்றதாகத் திருப்பீட பத்திரிகை அலுவலகம் மேலும் கூறியது.