2014-03-21 16:28:22

இனப்பாகுபாட்டைத் தூண்டும் அனைத்துச் செயல்களை விட்டொழிக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்


மார்ச்,21,2014. மார்ச் 21, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட, அனைத்துலக இனப் பாகுபாட்டு ஒழிப்பு நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், இனப்பாகுபாட்டின் அடிப்படையில் வெளியாகும் அனைத்து செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் எதிராக, அரசியல் மற்றும் சமயத் தலைவர்கள் வன்மையாய்க் கண்டனம் தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
தென்னாப்ரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவுக்குப் பின்னர் இந்த உலக நாளை முதன்முதலில் கடைப்பிடிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ள பான் கி மூன், மண்டேலாவின் இனப்பாகுபாட்டுக்கு எதிரான செயல்கள் அவரை 27 வருடங்கள் சிறையில் வைத்திருந்தன என்றும் கூறியுள்ளார்.
அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டுமென்று உறுதியாகப் போராடிய தென்னாப்ரிக்க கறுப்பின மக்களின் வாழ்விலிருந்து உலகினர் பாடம் கற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார் பான் கி மூன்.
இனப்பாகுபாடு ஆபத்தான அச்சுறுத்தல் என்பதை நாம் ஏற்கும் அதேவேளை, ஒரே மனிதக் குடும்பத்தின் வளமையான பன்மைத்தன்மையை உரையாடல் மூலம் மதித்து, பாதுகாத்துப் பேணுவோம் எனவும் தனது செய்தியில் கேட்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.