மார்ச்,17,2014. உரோம் ஆயர் என்ற முறையில் அம்மறைமாவட்டத்தின் Guidoniaவின் Setteville
என்ற மரியன்னை பங்குதளத்திற்கு சனிக்கிழமை மாலை சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
அங்குள்ள குழந்தைகளையும் இளையோர் சமுதாயத்தையும் சந்தித்து உரையாடினார். விசுவாசம்
குறித்து ஒருநாளும் வெட்கமடையாதீர்கள், கோவிலுக்கு வருவதற்கும் வெட்கப்படாதீர்கள் என்பதே
நான் உங்களுக்கு வழங்கும் முதல்செய்தி என இளையோரிடம் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
கிறிஸ்தவர்களாக இருப்பதில் நாம் வெட்கப்படக்கூடாது என்ற அருளை தூய ஆவி நமக்கு வழங்குகிறார்
என்றார். தூய ஆவியின் அருளை என்றும் நாடுவோம் என்ற திருத்தந்தை, குழந்தைகள் மற்றும்
இளையோரோடு இணைந்து தூய ஆவி நோக்கி செபிக்கவும் செய்தார். Guidonia அன்னைமரி பங்குதள
மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறு திருப்பலி
வாசகமான, இயேசுவின் உருமாற்ற நிகழ்ச்சி குறித்து மறையுரை ஒன்றும் வழங்கினார்.