லிஸ்பன் கர்தினால் Jose 'da Cruz Policarpoஅவர்கள்,
இறைவனடி சேர்ந்தார்
மார்ச்,13,2014. போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் உயர்மறை மாவட்டத்தின் முன்னாள் முதுபெரும்
தந்தையான கர்தினால் Jose 'da Cruz Policarpo அவர்கள், இப்புதனன்று தன் 78வது வயதில் இறைவனடி
சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரோடும் ஒப்புரவோடும்,
சகிப்புத் தன்மையோடும் வாழும் பக்குவம் பெற்ற கர்தினால் Policarpo அவர்கள், கத்தோலிக்கத்
திருஅவைக்கு மட்டுமல்ல, போர்த்துக்கல் நாட்டிற்கும் சிறப்பான பணியாற்றியவர் என்று போர்த்துக்கல்
நாட்டு பிரதமர் Pedro Passos Coelho அவர்கள் கூறினார். 1936ம் ஆண்டு பிப்ரவரி மாதம்
26ம் தேதி பிறந்த கர்தினால் Policarpo அவர்கள், உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்தும்
கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர். 1961ம்
ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட Policarpo அவர்கள், 1998ம் ஆண்டிலிருந்து 2013ம்
ஆண்டு முடிய லிஸ்பன் உயர் மறைமாவட்டத்தின் முதுபெரும் தந்தையாகப் பணியாற்றினார். முன்னாள்
திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற இரண்டாம் ஜான்பால் அவர்களால், 2001ம் ஆண்டு, இவர் கர்தினாலாக
உயர்த்தப்பட்டார். கர்தினால் Policarpo அவர்களின் மறைவையடுத்து, திருஅவையில் கர்தினால்களின்
எண்ணிக்கை 217ஆகக் குறைந்துள்ளது. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை
பெற்றவர்கள் 120 பேர்.